தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவோரைக் கொண்டுள்ள நாடு என்ற நிலையில் இருந்து தொழில்நுட்பத்தை உருவாக்குவோர் உள்ள நாடு என்ற நிலையை சிங்கப்பூர் எட்ட வேண்டும் என்று அறிவார்ந்த தேச திட்டத்திற்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் வலியுறுத்தி இருக்கிறார்.
கொவிட்-19 நோய்ப் பரவல் சிங்கப்பூரின் மின்னிலக்கமயமாதல் வேகத்தை முடுக்கிவிட்டுள்ளது என்று டாக்டர் விவியன் குறிப்பிட்டார்.
அறிவார்ந்த தேச தூதர்கள் நூறு பேரிடம் நேற்று மெய்நிகர் முறையில் கலந்துரையாடிய டாக்டர் விவியன், காணொளி விளையாட்டிலேயே மோசமாக இருந்த தாம் கணினி நிரலிடுதலைக் கற்றுக்கொள்ள உந்தித் தள்ளப்பட்டதை நினைவுகூர்ந்தார்.
“நாம் அனைவரும் கணினி விளையாட்டுகளை விளையாட மட்டும் தெரிந்தவர்களாக இருந்து, அத்தகைய விளையாட்டுகளை உருவாக்கும் திறனைக் கொண்டவர்களாக இல்லாமல் போய்விடுவோமோ என்று சில வேளைகளில் நான் கவலைப்பட்டதுண்டு. அதனால்தான், தொழில்நுட்பத்தை உருவாக்குபவர்களைக் கொண்ட நாடாக நாம் உருவெடுக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்,” என்று வெளியுறவு அமைச்சருமான டாக்டர் விவியன் சொன்னார்.
சிங்கப்பூரின் தொழில்நுட்ப உந்துதல் தொடர்பில் அறிவார்ந்த தேச தூதர்களின் கருத்துகளைக் கேட்டறியும் வகையில் மூன்று கலந்துரையாடல்களை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் முதலாவது அமர்வு நேற்று இடம்பெற்றது.
நாளை மறுநாள் திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் அடுத்த இரு அமர்வுகள் இடம்பெறவுள்ளன. சுகாதாரம், தொடர்பு, தகவல் மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி, நாடாளுமன்றச் செயலாளர் (அறிவார்ந்த தேசம், மின்னிலக்க அரசாங்கம்) இங் சீ கென் ஆகியோர் முறையே அந்த அமர்வுகளில் பங்கேற்பர்.
இப்போது 1,600க்கு மேற்பட்ட அறிவார்ந்த தேச தூதர்கள் உள்ளனர். அன்றாட வாழ்வில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது பற்றி அவர்கள் மற்றவர்களுக்குப் பயிற்சியளித்து வழிகாட்டுவர்.
அவர்களின் முயற்சிகளுக்கு நன்றி கூறிக்கொண்ட டாக்டர் விவியன், அதே வேளையில் ‘வெளிப்படையான, பொருத்தமான, செயல்படுத்தவல்ல’ கருத்துகளை அவர்கள் தெரிவிக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.
எல்லா நேரங்களிலும் அரசாங்கமும் சமூகமும் இணைந்து புதிய சேவைகளை உருவாக்கவல்ல, மறு கற்பனை செய்யவல்ல எதிர்காலத்தைத் தாம் எதிர்நோக்கி இருப்பதாகவும் அவர் கூறினார்.