சிங்கப்பூரர்கள் ஊழியர்களுக்காக குறைந்தபட்ச வருமானத்துக்கு எதிர்க்கட்சித் தலைவரும் பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளருமான பிரித்தம் சிங் அழைப்பு விடுத்துள்ளார். குறைந்தபட்ச மாதம் சம்பளமாக $1,300 வழங்கப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இவ்வாறு செய்வது தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் என்றும் இன்றைய பொருளியல் சூழலில் இது மிகவும் அவசியம் என்றும் அவர் கூறினார்.
குறைந்த வருமான ஊழியர்களின் நலனைக் காக்கவும் அவர்களது சம்பளத்தை உயர்த்தவும் வழிகளைக் காண அரசாங்கம், தொழிலாளர் இயக்கம், முதலாளிகள் ஆகியோரைக் கொண்ட பணிக்குழு ஒன்று அமைக்கப்படும் என்று நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டதை அடுத்து, திரு சிங் இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் குறைந்தபட்ச வருமான அணுகுமுறையில் உள்ள சில அம்சங்களை அவர் வரவேற்றார்.
ஆனால் குறைந்த வருமானம் தொடர்பில் அரசாங்கத்தின் துறைவாரியான அணுகுமுறை நடைமுறைப் படுத்தப்படுவதற்கு நீண்டகாலமாகும் என்று திரு சிங் தெரிவித்தார்.