மன அழுத்தத்துக்கு உள்ளான தாய், ஆட்டிசம் குறைபாடுள்ள மகனைக் கொன்று, உயிரை மாய்த்துக்கொண்டார்: மரண விசாரணை அறிக்கை

மன அழுத்தத்துக்கு உள்ளான தாய், ஆட்டிசம் குறைபாடுள்ள மகனைக் கொன்று, உயிரை மாய்த்துக்கொண்டார்: மரண விசாரணை அறிக்கை

2 mins read
a38b3f6c-9867-4626-b19f-c2675d1ed1ec
படம்: ஷின் மின் நாளிதழ் -

மன அழுத்தத்துக்குட்பட்ட ஒரு தாயார் தனது 5 வயது மகனின் கழுத்தை நெரித்துக் கொன்று விட்டு, பின்னர் புக்கிட் தீமா இயற்கை வனப்பகுதியில் தன்னைத் தானே குத்தி உயிரை மாய்த்துக்கொண்டதாக மரண விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கொல்லப்பட்ட குழந்தைக்கு 'ஏடிஎச்டி' எனும் மன இறுக்கம் மற்றும் கவனக்குறைவு ஹைப்பராக்டிவிட்டி கோளாறு இருந்தது. அவனது தாயாரான 41 வயது ஜப்பானிய மாது நாமி ஒகாட்டா தமது மகனைப் பற்றிய அக்கறையில் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தார்.

வேலைகளையும் தமது இரு பிள்ளைகளை கவனிப்பதையும் ஒருசேர செய்வதில் சிரமம் இருப்பதாக திருவாட்டி நாமி மருத்துவர்களிடம் தெரிவித்திருந்தார். மன அழுத்தத்துக்காக அவர் சிகிச்சையும் எடுத்துக்கொண்டிருந்தார்.

ஆனால், சிகிச்சை பலனளிக்கவில்லை என்று , உயிரை மாய்த்துக்கொள்வதற்கு முன்பு தம் கணவருக்கு எழுதிய குறிப்பில் அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும், தன்னுடைய செயலுக்கு மன்னிப்புக்கோரியும் தங்களுடைய இரண்டாவது பிள்ளையை நன்கு வளர்க்கும்படியும் அந்தக் குறிப்பில் அவர் கேட்டுக்கொண்டார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 30ஆம் தேதி வேலை நிமித்தமாக திருவாட்டி நாமியின் கணவர் வெளிநாட்டுக்குச் சென்றிருந்தார். கடந்த ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி இரவு கைபேசியில் பேசியபோதுகூட தம் மனைவியிடம் மாற்றம் ஏதும் தென்படவில்லை என்றார் அவரது கணவர்.

நவம்பர் மாதம் 14ஆம் தேதி அதிகாலை வேளையில் தம் மூத்த மகன் சொடாரோவின் கழுத்தை கயிற்றால் நெறித்து, பின் அவனது சடலத்துடன் தம் காரில் புக்கிட் தீமாவின் லோரோங் சேஷுவாய் பகுதிக்குச் சென்றார்.

மகனின் சடலத்தை காரிலேயே விட்டுவிட்டு, காரிலிருந்து 10 மீட்டர் தூரத்தில் கத்திக் குத்துடன் அந்த மாது இறந்து கிடந்ததை காலை 6.15 மணியளவில் துணை பாதுகாவல் அதிகாரி ஒருவரும் அவருடன் பணிபுரியும் மற்றவரும் கண்டுபிடித்தனர்.

திருவாட்டி நாமியின் மரணம் 'வேண்டுமென்றே உயிரை மாய்ந்துக்கொண்ட செயல்' என்றும் 'சட்ட விரோதமாக தாயார் தன் கைகளாலேயே மகனைக் கொன்ற செயல்' என்று மரண விசாரணை அதிகாரி கமலா பொன்னம்பலம் நேற்று (அக்டோபர் 19) நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

உயிரை மாய்த்துக்கொள்ளும் எண்ணம் தோன்றினால் உதவிக்கு:

Samaritans Of Singapore: 1800-221-4444

Singapore Association For Mental Health: 1800-283-7019

Institute Of Mental Health's Mobile Crisis Service: 6389-2222

Care Corner Counselling Centre (Mandarin): 1800-353-5800

Silver Ribbon: 6386-1928

Tinkle Friend: 1800-274-4788

குறிப்புச் சொற்கள்