சிங்கப்பூரில் புதிதாக ஐவருக்கு கொவிட்-19; சாங்கி விமான நிலைய முனையம் 3ல் ஊழியர்களுக்கு பரிசோதனை

சிங்கப்பூரில் புதிதாக ஐவருக்கு கொவிட்-19; சாங்கி விமான நிலைய முனையம் 3ல் ஊழியர்களுக்கு பரிசோதனை

1 mins read
4ab3e337-a207-444c-9e50-663c58081bad
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் இன்று (அக்டோபர் 25) நண்பகல் நிலவரப்படி புதிதாக ஐவருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 57,970 ஆகியுள்ளது.

இன்று கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களில் இருவர் விடுதிவாசிகள்; மூவர் வெளிநாடுகளிலிருந்து வந்த பிறகு இங்கு தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

நேற்று பதிவான 14 புதிய கிருமித்தொற்று சம்பவங்களில் 2 சாங்கி விமான நிலைய முனையம் 3ல் பணிபுரியும் ஊழியர்களுக்கு உறுதி செய்யப்பட்டது.

அவர்களில் ஒருவர் முனையம் 3ல் பாதுகாவல் அதிகாரியாகப் பணிபுரிபவர்; உடல் நலக் குறைவு ஏற்படுவதற்கு முன்பு பணிக்குச் சென்றிருந்தார். கொவிட்-19 உறுதிப்படுத்துவதற்கு முன்பு அவர் சிங்கப்பூர் தேசிய கண் நிலையத்துக்கு சிகிச்சைக்காகச் சென்றிருந்தார்.

மற்றவர் முனையம் மூன்றில் உள்ள ராபிள்ஸ் மருந்தகத்தில் சளி/எச்சில் மாதி பரிசோதனையின் உதவியாளர். மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவதற்கு முன்பு பணிக்குச் சென்றிருந்தார்.

ஆனால், இவ்விருவருக்கும் இடையே தொடர்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முனையம் 3ல் பயணிகளுடன் தொடர்பில் இருக்கக்கூடிய, அனைத்து ஊழியர்களுக்கும் கொவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்தப் புதிய கொவிட்-19 நோயாளிகள் முனையம் 3ல் உள்ள ஃபேர்பிரைஸ் ஃபைனஸ்ட் பேரங்காடி, ஜூரோங் பாயின்ட் கடைத்தொகுதி போன்றவற்றுக்குச் சென்றிருந்தனர்.

இதுவரை சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றால் 28 பேர் உயிரிழந்தனர்.

குறிப்புச் சொற்கள்