அவசரகால மருத்துவச் சேவைகள் (EMS) டி-சட்டை, கறுப்பு நிற கால்சட்டை அனிந்திருந்த, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையில் ஒரு முழு நேர தேசிய சேவையாளரான ஹஸிக் சியாமிம் எஸா, தாம் தற்போது பணியில் இல்லாத EMS அதிகாரி என்று செங்காங் தீயணைப்பு நிலைய அதிகாரியிடம் அறிமுகப்படுத்திக்கொண்டு, நிலையத்தில் இருக்கும் சக ஊழியரிடம் பேச விரும்புவதாகக் கூறினார்.
கடந்த மார்ச் மாதம் 12ஆம் தேதி அதிகாலை சுமார் 3 மணியளவில் அங்கு சைக்கிளில் வந்த ஹஸிக், அங்கிருந்து அவசரகால மருத்துவ வாகனம் (ஆம்புலன்ஸ்) ஒன்றைத் திருடிச் சென்றார்.
அந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை, தம் காதலி வசித்த, பொங்கோலின் எட்ஜ்டேல் பிளேன்சில் இருக்கும் ஒரு கொண்டோமினியத்துக்கு ஓட்டிச் சென்றார் ஹஸிக்.
அந்த கொண்டோமினியத்தில் ஹஸிக்கை பார்த்த மற்ற சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை வீரர்கள் போலிசுக்கு தகவல் அளித்தனர்.
அந்த வாகனத்தைத் திருடியது, ஏமாற்றியது, கோபமான செய்கையால் ஒருவருக்கு காயம் விளைவித்தது ஆகிய குற்றச்சாட்டுகளை இன்று (நவம்பர் 4) நீதிமன்றத்தில் அந்த 21 வயது இளையர் ஒப்புக்கொண்டார்.
சம்பவத்தன்று அதிகாலை வேளையில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை வீரர் ஒருவர் தயார் நிலையில் நிறுத்திவிட்டுச் சென்ற ஆம்புலன்சை ஹஸிக் தன் காதலி வசித்த கொண்டோமினியத்துக்கு ஓட்டிச் சென்றார். அங்கு சென்றதும், அந்த வாகனத்தின் விளக்குடன் கூடிய ஒலிப்பானை இயக்கினார். அதனைப் பார்த்து, அந்த கொண்டோமினியத்தின் பாதுகாவலர் ஆம்புலன்சுக்காக கதவைத் திறந்துவிட்டார்.
காலை 4 மணியளவில் ஆம்புலன்ஸ் காணாமல் போனது தெரிந்து, தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டது. பின்னர் ஆம்புலன்ஸ் அந்த கொண்டோமினியத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. ஹஸிக்கும் கைதானார்.
கடந்த மே மாதம் 2ஆம் தேதி தெம்பனிஸ் நார்த் டிரைவ் 2வில் இருக்கும் ஹயன்ட் பேரங்காடி வளாகத்தில் டாக்சி ஓட்டுநர் ஒருவருடன் ஏற்பட்ட மோதலில், தாம் ஓட்டிச் சென்ற காரை வேகமாகத் திருப்பி ஓட்டினார் ஹஸிக். அப்போது காயமடைந்த டாக்சி ஓட்டுநருக்கு உதவாமல் சென்றுவிட்டார் அவர்.
‘சின்ஸோஃப்ரெனிக்’ எனும் மனநலக் கோளாறால் ஹஸிக் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது. அவருக்கு நன்னடத்தைக் கண்காணிப்பு, கட்டாய சிகிச்சை ஆணை விதிக்க முடியுமா என்பது குறித்து ஆலோசிக்க ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் கோரியுள்ளது.
இந்த வழக்கின் மீதான தீர்ப்பு டிசம்பர் 11 அன்று வழங்கப்படும்.
திருட்டுச் செயலுக்கு ஏழாண்டுகள் வரை சிறை, அபராதமும் ஏமாற்றியதற்காக மூன்றாண்டுகள் சிறை, அபராதமும் விதிக்கப்படலாம்.