நீதிமன்றத்தில் பொய்ச் சாட்சி சொன்னதாகக் கூறப்பட்டதை அடுத்து சாங்கி விமான நிலையக் குழும முன்னாள் தலைவர் லியூ மன் லியோங்கின் மகன் கார்ல் லியூவிடம் போலிஸ் விசாரணை நடத்தியது.
அவ்விசாரணை முடிவுற்ற நிலையில் கார்ல் லியூ மீது நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டவிருப்பதாக போலிஸ் தெரிவித்துள்ளது.
அரசாங்க அதிகாரியிடம் பொய்யான தகவலைத் தெரிவித்தது, பொய்ச் சாட்சி கூறியது ஆகிய இரு குற்றச்சாட்டுகள் லியூ மீது சுமத்தப்படவுள்ளன.
பொய்ச் சாட்சியம் அளித்தது தொடர்பில் லியூவிடம் போலிஸ் விசாரணை நடத்தியதாக சட்ட, உள்துறை அமைச்சர் சண்முகம் நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.
குமாரி பார்தி லியானி மீதான திருட்டுக் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையின்போது லியூ பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஆனால், அவற்றின் உண்மைத்தன்மை குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி ஐயம் கொண்டார். தாம் பெண்களின் டி-சட்டைகளை அணிந்திருந்ததாக லியூ கூறியதும் அவற்றில் ஒன்று.
விசாரணையின்போது லியூவின் நடத்தையிலும் அவரின் சாட்சியங்களிலும் பல அம்சங்கள் மிகுந்த அதிருப்தியை அளிப்பதாகவும் சந்தேகத்தை எழுப்புவதாகவும் இருந்தன என்று திரு சண்முகம் குறிப்பிட்டார்.
எடுத்துக்காட்டாக, குமாரி லியானியின் வசம் இருந்த இரு பணப்பைகளும் ஒரு கைக்கடிகாரமும் தம்முடைய குடும்ப உறுப்பினர்கள் தனக்கு அளித்தவை என்று லியூ சாட்சியம் அளித்து இருந்தார்.
ஆயினும், திரு லியூ மன் லியோங் உட்பட அக்குடும்ப உறுப்பினர்கள் எவரும் அந்தக் குறிப்பிட்ட பொருள்களைத் தாங்கள் கொடுத்ததாக நினைவுகூர இயலவில்லை.
பிரிட்டனில் இருந்து தாம் வாங்கி வந்த படுக்கை விரிப்பும் குமாரி லியானியிடம் இருந்ததாக லியூ நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தார். ஆனால், இக்கியா முத்திரை கொண்ட ஒரு மெத்தை உறையின் சாயலை அது ஒத்து இருந்ததாகக் கூறப்பட்டது.
அத்துடன், அந்தப் படுக்கை விரிப்பைத் தனது அறையிலோ, படுக்கையின்மீதோ கண்டதே இல்லை என்று கார்ல் லியூவின் மனைவி தெரிவித்து இருந்தார்.
மேலும், பெண்கள் அணியக்கூடிய பல ஆடைகளையும் தன்னுடையது என்று லியூ குறிப்பிட்டு இருந்தார்.
இத்தகைய முரண்பட்ட கூற்றுகள் குறித்து அவரிடம் விசாரிக்கப்பட்டதாக அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.
போலிசிடம் புகார் அளிப்பவர், சந்தேகத்திற்குரிய பொருள்கள் மீது உரிமை கோரும்போது தீவிரத்தன்மையுடன் அதைச் செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.
“அது விரிவாக இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால், கவனமாகப் பரிசீலித்து அதைச் செய்ய வேண்டியது அவசியம்,” என்றார் அமைச்சர்.