தன் காதலியைச் சந்திப்பதற்காக மருத்துவ வண்டி ஒன்றை ஓட்டிச் சென்ற முன்னாள் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை முழுநேர தேசிய சேவையாளர் ஹஸிக் சியமிம் எசா என்பவருக்குக் கட்டாய சிகிச்சை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மனநோயால் முன்னர் பாதிக்கப்பட்ட 21 வயது ஹஸிக், சிறைத் தண்டனைக்குப் பதிலாக சிகிச்சைக்குச் சென்று மருத்துவ உதவி பெறவேண்டும் என்று நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
மேலும், அனைத்து வகை வாகனங்களையும் ஹஸிக் ஓட்டுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்குத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு மார்ச் 12ஆம் தேதியன்று அவசரகால மருத்துவச் சேவைகள் வழங்கும் ஊழியரின் உடையை உடுத்தி, செங்காங் தீயணைப்பு நிலையத்திற்குச் சென்ற ஹஸிக், தான் ஒரு வேலையாக நண்பரிடம் பேச வேண்டும் என்று அங்கு காவலில் இருந்த அதிகாரியிடம் கூறி நிலையத்தினுள் சென்றுவிட்டார்.
தயார் நிலையில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மருத்துவ வண்டி ஒன்றை, ஹஸிக் பொங்கோல் வட்டாரத்தில் உள்ள கூட்டுரிமை வீடு வளாகத்துக்கு ஓட்டிச் சென்றதாகவும் தன் காதலியை அங்கு சந்தித்ததாகவும் கூறப்பட்டது.
மருத்துவ வண்டியின் அவசரநிலை விளக்குகள் எரிந்ததால், அவ்விடத்தில் மருத்துவ உதவி தேவைப்படுவதாக கூட்டுரிமை கட்டடங்களின் பாதுகாவல் அதிகாரியை நம்ப வைத்தார் ஹஸிக்.
நிலையத்தில் மருத்துவ வண்டியைக் காணாத சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள், அதைக் கண்டுபிடிக்கக் குழு ஒன்றை அனுப்பினர். அக்குழு மருத்துவ வண்டியைக் கண்டுபிடித்ததை அடுத்து ஹஸிக் தடுத்து வைக்கப்பட்டார்.
மே 12ஆம் தேதியன்று நடந்த வேறொரு சம்பவத்தில், டாக்சி ஓட்டுநர் ஒருவருடன் ஹஸிக் வாக்குவாதம் செய்ததுடன் அவரை வாகனம் கொண்டு இடித்துவிட்டு நிற்காமல் சென்றதாகவும் கூறப்பட்டது.