சிங்கப்பூரில் டெங்கி காய்ச்சல் ஆபத்து இன்னமும் ஓய்ந்தபாடில்லை. அந்தக் காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து இருக்கிறது என்றாலும் அந்த நோயை ஏற்படுத்தக்கூடிய கொசுக்கள் இன்னமும் ஒடுங்கவில்லை என்று தேசிய சுற்றுப்புற வாரியம் எச்சரித்து இருக்கிறது.
இந்த மாதத்தின் நடுப்பகுதியில் வாரம் ஒன்றுக்கு 156 பேர் டெங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இந்த எண்ணிக்கை சென்ற மாத நடுப்பகுதியில் 236 பேராக இருந்தது.
இருந்தாலும், டெங்கி காய்ச்சலை ஏற்படுத்தக்கூடிய கொசுக்களின் இனப்பெருக்கம் சென்ற மாதம் 8 விழுக்காடு அதிகரித்து விட்டது.
இது ஒருபுறம் இருக்க, பொதுவாக இங்கு காணப்படாத டென் வி-3 மற்றும் டென் வி-4 என்ற இரு வகை கொசுக்களின் இனப்பெருக்கமும் அதிகரித்துள்ளது.
கொசுக்கள் மூலம் ஏற்படக்கூடிய தொற்றுநோயால் பாதிக்கப்படுவோரில் 50 விழுக்காட்டுக்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த வகை கொசுக்களே காரணமாக இருக்கின்றன.
டெங்கி காய்ச்சலை ஏற்படுத்தக்கூடிய நான்கு வகை கொசுக்கள் இருக்கின்றன.
பாதிக்கப்பட்டு உள்ளோர் ஒரு குறிப்பிட்ட வகை கொசுவுக்கு எதிரான தடுப்பாற்றலை மட்டும் பெற்று இருக்கிறார்கள்.
இதர மூன்று வகை கொசுக்களை எதிர்க்கக்கூடிய தடுப்பாற்றல் அவர்களிடம் இருக்காது என்பதால் எஞ்சிய மூன்று வகை கொசுக்கள் மூலம் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உண்டு.
சிங்கப்பூரில் 2020க்கு முன்பு 30 ஆண்டு காலத்தில் ஏற்பட்ட எல்லா டெங்கி காய்ச்சல்களுக்கும் டென் வி-1 கொசுவே காரணம். அல்லது 2016க்கு பிறகு டென் வி-2 வகை கொசுவால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
சென்ற ஆண்டில் டென் வி-3 வகை கொசு இனப்பெருக்கம் அதிகரித்துவிட்டது.
இந்த வகை கொசுவே இங்கு அதிக மக்கள் டெங்கிக் காய்ச்சலால் இப்ேபாது பாதிக்கப்படுவதற்கு காரணமாக இருக்கக்கூடும்.
சென்ற ஆண்டில் மொத்தம் 35,515 பேர் பாதிக்கப்பட்டனர். குறைந்தபட்சம் 29 பேர் மாண்டு இருக்கிறார்கள்.
இதற்கு முன்னதாக 2013ல் 22,170 பேர் டெங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். 2005ல் 25 பேர் மாண்டுவிட்டனர்.
இதற்குப் பிறகு சென்ற ஆண்டில்தான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் மரண எண்ணிக்கையும் கூடியது.
கொசு மூலம் பரவும் டெங்கி காய்ச்சலுக்கு எதிராக மேலும் விழிப்புநிலை தேவை என்று தேசிய சுற்றுப்புற வாரியம் வலியுறுத்தி இருக்கிறது.