உருமாறிய கொரோனா கிருமியைக் கண்டறியும் புதிய கொவிட்-19 விரைவுப் பரிசோதனை முறை சிங்கப்பூரில் தயாரிக்கப்பட்டுள்ளது.
அரை மணி நேரத்திற்குள் பரிசோதனை முடிவுகளை வழங்கும் இது, நோயாளிகளின் பரிசோதனை மாதிரி மீது நேரடியாக பயன்படுத்தப்படலாம்.
தற்போது சிங்கப்பூரில் பயன்படுத்தப்பட்டு வரும் 'ராப்பிட் ஆன்டிஜன்' (ஏஆர்டி) பரிசோதனை முறையைவிட இது ஏறக்குறைய 10 மடங்கு துல்லியமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
'வேன்கார்ட்' என்று அழைக்கப்படும் இந்தப் பரிசோதனை முறையை நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தை (என்டியு) சேர்ந்த விஞ்ஞானிகள் தயாரித்து உள்ளனர்.
தற்போது சிங்கப்பூரில் பயன்படுத்தப்படும் 'ஏஆர்டி' பரிசோதனை முறை, கொரோனா கிருமியின் மேற்பரப்பில் உள்ள 'ஆன்டிஜன்' எனப்படும் ஒருவகை புரதத்தைக் கண்டறிகிறது. இந்தப் புரதத்தில் மாற்றம் எதுவும் ஏற்பட்டால் 'ஏஆர்டி' பரிசோதனை முடிவுகள் துல்லியமான முடிவுகளைத் தராமல் போகலாம்.
'ஏஆர்டி' பரிசோதனை முறை நோய் எதிர்ப்பொருளைச் சார்ந்து இருக்கிறது. நோய் எதிர்ப்பொருளை மறுவடிவமைக்க நேரம் எடுக்கும் என்பதால் இந்தப் பரிசோதனையை மறுவடிவமைக்கவும் காலம் எடுக்கும்.
இந்தப் பரிசோதனை முறைக்கான ஆய்வை வழிநடத்திய இணைப் பேராசிரியர் டான் மெங் ஹாவ், சந்தையில் விற்பனைக்கு வரும்போது வழக்கமான 'ஏஆர்டி' பரிசோதனையைவிட 'வேன்கார்ட்' பரிசோதனைக்கான செலவு குறைவாக இருக்கக்கூடும் என்று சொன்னார்.
உலகளவில் உருமாறிய கொரோனா கிருமி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. பிரிட்டனின் 'பி117', பிரேசிலின் 'பி1', தென் ஆப்பிரிக்காவின் 'பி1351' வகை கிருமி உள்ளிட்டவை அதில் அடங்கும்.