சிங்கப்பூரின் பள்ளிகளில் உயர் தமிழ் பாடத்தைப் படிக்கும் வாய்ப்பு அமைய உள்ளது. அடுத்த ஆண்டு தொடக்க நிலை 3 மாணவர்களுக்கும் 2023ல் தொடக்க நிலை 4 மாணவர்களுக்கும் உயர்தமிழ் கற்கும் வாய்ப்பு கிட்டும். கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட முன்னோடித் திட்டம் வெற்றி யடைந்ததைத் தொடர்ந்து இது நடப்புக்கு வருகிறது.
கல்வி இரண்டாம் அமைச்சர் டாக்டர் மாலிக்கி ஒஸ்மான் நேற்று இதனை அறிவித்தார். புதிய பாடத்திட்டத்திற்கான முன்னோடிப் பள்ளிகளுள் ஒன்றான வெஸ்ட்வூட் தொடக்கப் பள்ளிக்குச் சென்றிருந்தபோது அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
கடந்த ஆண்டில் 35 தொடக்கப் பள்ளிகளும் இவ்வாண்டு 54 தொடக்கப் பள்ளிகளும் இந்த முன்னோட்டத் திட்டத்தில் பங்கெடுத்தன.
இப்புதிய பாடத்திட்டத்தின் அறிமுகம் ஏற்கெனவே தொடக்கநிலை 3, 4 மாணவர்களுக்கு வழங்கப்படும் உயர் சீன வகுப்புகளையும் தொடக்கநிலை ஐந்தாம், ஆறாம் நிலைகளில் வழங்கப்படும் உயர் தாய்மொழி வகுப்புகளையும் பூர்த்திசெய்கிறது என்று கல்வி அமைச்சு தெரிவித்தது.
“கூடுதலான தமிழ் இலக்கியம், பண்பாடு தொடர்பான தகவல்களை மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் இப்பாடத்திட்டம் வரையப்பட்டது,” என்று கல்வி அமைச்சின் பாடக்கலைத்திட்ட வரைவு, மேம்பாட்டுப் பிரிவு, தமிழ்மொழிப் பகுதி மூத்த சிறப்பாய்வாளர் திருவாட்டி தமிழ்வாணி முத்து தெரிவித்தார்.
இலக்கியக் கதைகள், விளையாட்டு முறையில் இலக்கணம், வாக்கியம் அமைத்தல், சொல்வளப் பெருக்கம் போன்றவற்றைக் கற்பிக்க, மாணவர்கள் அதிக ஈடுபாட்டுடன் நடவடிக்கைகளில் கலந்துகொண்டதாக திட்டத்தில் பங்கேற்ற தமிழ் ஆசிரியர்கள் தம்மிடம் கூறியதாக அவர் குறிப்பிட்டார்.
செங்காங் தொடக்கப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றும் திருமதி ஜெயசுதா விஜய் புதிய பாடத்திட்டம் மாணவர்கள் தன்னம்பிக்கையோடு தமிழில் கருத்துகளை முன்வைக்க உதவுவதாகவும் குறிப்பிட்டார்.
“ராமாயணக் காப்பியத்தில் இடம்பெறும் கதாப்பாத்திரத்தைப் பற்றி வகுப்பில் படித்துவிட்டு, வீட்டிற்கு வந்த பின்னர் இணையம் வழி ஆராய்ந்து, மறுநாள் அந்தக் கதாப்பாத்திரத்தைப் பற்றிய சுவாரசிய தகவல்களை வகுப்பில் அவர்கள் பகிர்ந்துகொள்ளும்போது இன்னும் ஆழமாக சிந்திக்கத் தொடங்குகிறார்கள்,” என்றார் அவர்.
இத்திட்டத்தில் கடந்தாண்டிலிருந்து இடம்பெறும் அவரது வகுப்பு மாணவரான 10 வயது அன்ஷிதா சுதாகர், ஆசிரியர் வகுப்பில் கதைகள் சொல்வதும் கவிதை எழுத சொல்லிக்கொடுப்பதும் தமக்கு பிடித்தவை என்று விளக்கினார்.