கொவிட்-19 பரவலால் சிங்கப்பூரில் ஏற்பட்டுள்ள ஊழியர் பற்றாக்குறையைத் தணிக்க, வெளிநாட்டு ஊழியர்களைப் பாதுகாப்பாகவும் கட்டுப்பாடுகளோடும் சிங்கப்பூருக்குள் நுழைய அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என்று கட்டட, கட்டு மானத் துறையைப் பிரதிநிதிக்கும் முக்கிய அமைப்புகள் கேட்டுக் கொண்டுள்ளன.
சிங்கப்பூர் குத்தகையாளர்கள் சங்கம், சிங்கப்பூர் பொறியியல் கழகம், சொத்துச் சந்தை மேம்பாட்டாளர் சங்கம், சிங்கப்பூர் கட்டடக் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் அடங்கிய கட்டுமானத் துறை கூட்டுக் குழு இன்று (மே 17) வெளியிட்ட அறிக்கையில் அதனைத் தெரிவித்தது.
சிங்கப்பூரில் கொவிட்-19 உருமாறிய கிருமி பரவிவரும் நிலையில் அரசாங்கம் விதித்துள்ள கட்டுப்பாடுகளை ஆதரிப்பதாக குழு கூறியது. அதே வேளையில், நாட்டு எல்லைகள் நீண்டகாலத்துக்கு மூடப்பட்டால், ஊழியர் பற்றாக்குறை மேலும் கடுமையான பிரச்சினைகளுக்கு இட்டுச் செல்லும் என்று கூட்டுக் குழு எச்சரித்தது. அதன் தொடர்பான சவால்களையும் குழு விவரித்தது.
கட்டுமானத் துறையில் வெவ்வேறு தொழில்களைச் செய்யும் ஊழியர்கள் தேவைப்படுகின்றனர். ஆனால் போதுமானவர்கள் இல்லை. ஆள் பற்றாக்குறையால் இங்குள்ள ஊழியர்கள் ஏற்கெனவே கடும் வேலைப் பளுவைச் சுமந்துள்ளனர். அதனால் வேலையிட விபத்து அபாயமும் அதிகரித்துள்ளது.
இங்கு வேலை பார்க்கும் வெளிநாட்டு ஊழியர்கள் பலர், வேலை அனுமதி முடிந்தவுடன் நாடு திரும்பத் திட்டமிட்டுள்ளனர். அவர்கள் நாடு திரும்பும்போது, தற்போது நடைபெற்று வரும் கட்டுமானத் திட்டங்களை முடிக்க, அவர்கள் இடத்தை நிரப்ப வேண்டும்.
இல்லாவிட்டால், சுமார் 18,000 நிறுவனங்களையும் பல்லாயிரம் ஊழியர்களையும் கொண்ட கட்டுமானத் துறை இன்னும் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று குழு கூறியது.
மேலும், தனியார், அரசாங்க வீடுகளை வாங்கியுள்ளவர்கள், அவற்றின் கட்டுமானம் முடிவதற்கு இன்னும் நீண்ட காலம் காத்திருக்க வேண்டும் என்று குழு எச்சரித்தது.
மருத்துவமனைகள், பள்ளிகள், எம்ஆர்டி ரயில் போன்ற பொதுத் திட்டங்களின் கட்டுமானமும் தாம தமாகக்கூடும் என்றது அக்குழு.
இதன் பொருட்டு, வெளிநாட்டு ஊழியர்களைத் தங்கள் நாடுகளிலிருந்து பாதுகாப்பாகவும் கட்டுப்பாடுகளோடும் இங்கு வரவழைக்கும் நடைமுறையை உருவாக்க அரசாங்கத்துடன் சேர்ந்து பணியாற்றத் தயார் என்றும் கூட்டுக் குழு சொன்னது.
நிதிப் பிரச்சினைகளைச் சமாளிக்க கட்டுமானத் துறை நிறுவனங்களுக்கு கூடுதல் உதவிகள் வழங்குவது பற்றி பரிசீலிக்கும்படி கூட்டுக்குழு கேட்டுக் கொண்டது.
குறைந்த ஊழியர்களைப் பயன்படுத்தும் புதிய கட்டுமான முறை களுக்கு இன்னும் வேகமாக மாற உறுதி கொண்டிருப்பதாகவும் அது கூறியது.