சமூக அளவில் 27 பேர் உட்பட சிங்கப்பூரில் நேற்று நண்பகல் நிலவரப்படி புதிதாக 41 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. சமூகத்தில் கிருமி தொற்றியவர்களில் ஆறு பேர், முன்னதாக கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில்லாத நிலையில் உள்ளனர்.
எஞ்சிய 21 பேரும் முன்னதாக கிருமி தொற்றியவர்களுடன் தொடர்புடையவர்கள். அவர்களில் 15 பேர் ஏற்கெனவே தனிமை உத்தரவில் உள்ளனர். இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வந்த 14 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்கள் இங்கு வந்தவுடன் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. அவர்களில் 10 பேர் நாடு திரும்பிய சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள்.
வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் புதிதாக எவருக்கும் தொற்று பதிவாகவில்லை. சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 61,730ஐ எட்டியுள்ளது.
நேற்று முன்தினம் 38 கொவிட்-19 கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகின. நால்வர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என்றும் சமூகத்தில் உள்ளவர் 34 பேர் என்றும் கூறப்பட்டது. இவ்வாண்டில் பதிவான இரண்டாவது ஆக அதிக சமூகத்தொற்று எண்ணிக்கை இது.
'வெஸ்ட்கேட்' பேரங்காடியில் பாதுகாப்பு இடைவெளித் தூதர் பணியில் இருந்த ஒருவர், சாங்கி சிறைச்சாலை கைதிகள் மூவர், பள்ளி மாணவர்கள் ஐவர் ஆகியோரும் புதன்கிழமை பதிவான சம்பவங்களில் அடங்குவர்.
ஐந்து புதிய கிருமிக் குழுமங்களைச் சுகாதார அமைச்சு அடையாளம் கண்டுள்ள நிலையில் சிங்கப்பூரில் 24 கிருமித்தொற்றுக் குழுமங்கள் உருவாகியுள்ளன.