ஒருவருக்கு கொவிட்-19 தொற்று இருக்கிறதா என்பதை ஒரே நிமிடத்தில் துல்லியமாகக் கண்டுபிடித்துவிடக்கூடிய மூச்சுக்காற்று பரிசோதனை முறை சிங்கப்பூரில் சோதித்துப் பார்க்கப்படும்.
துவாஸ் சோதனைச்சாவடியில் அடுத்த சில நாட்களில் அந்த முறையைத் தொடங்கத் திட்டமிடப்பட்டு இருக்கிறது.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 'பிரித்தோனிக்ஸ்' என்ற நிறுவனம் உருவாக்கி இருக்கும் 'பிரிஃபென்ஸ் கோ கொவிட்-19 மூச்சுக்காற்று சோதனைக் கருவி' (BreFence Go Covid-19 Breath Test System) என்ற அந்தக் கருவிக்கு சிங்கப்பூர் சுகாதார அறிவியல் ஆணையம் தற்காலிக அங்கீகாரம் வழங்கி இருக்கிறது.
இந்தப் பல்கலைக்கழகமும் பிரித்தோனிக்ஸ் நிறுவனமும் வெளியிட்ட கூட்டறிக்கை இந்த விவரங்களைத் தெரிவித்தது.
இந்த மூச்சுக்காற்று பரிசோதனை முறை மூலம் வேகமாக, செம்மையாக கொவிட்-19 கிருமி இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ளலாம். இந்தச் சோதனையை நடத்த பயிற்சி பெற்றவர்களே போதும். மருத்துவப் பயிற்சி பெற்ற ஊழியர்கள் தேவையில்லை.
துவாஸ் சோதனைச்சாவடியில் புதிய கருவியைச் சோதித்துப் பார்ப்பதன் தொடர்பில் சுகாதார அமைச்சுடன் சேர்ந்து பிரித்தோ னிக்ஸ் இப்போது செயல்பட்டு வருகிறது. அந்தச் சோதனைச்சாவடி வழியாக சிங்கப்பூருக்கு வருபவர்களுக்குச் சுவாசக்காற்று பரிசோதனை நடத்தப்படும்.
இப்போதைய கொவிட்-19 கட்டாய ஏஆர்டி சோதனையுடன் சுவாசக்காற்றுச் சோதனையும் நடத்தப்படும். ஏர்ஆர்டி சோதனை மூலம் அதே இடத்தில் 30 நிமிடங்களில் முடிவை தெரிந்துகொள்ளலாம்.
கொவிட்-19 தொற்று இருக்கிறதா என்பதைக் கண்டறிய நம்பகமான சோதனை என்று கருதப்படும் பிசிஆர் பரிசோதனைக்கு அதிக கால நேரம் ஆகும்.
யாருக்காவது மூச்சுக்காற்றுச் சோதனை மூலம் கிருமித்தொற்று இருப்பது தெரியவந்தால் அதை உறுதிப்படுத்த அவர் பிசிஆர் பரிசோதனைக்கு உட்பட வேண்டும்.
இதனிடையே, புதிய மூச்சுக்காற்றுக் கருவி பற்றி விளக்கிய பிரித்தோனிக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டாக்டர் ஜியா ஸுமான், இதைப் பயன்படுத்துவோரிடையே கிருமி தொற்ற வாய்ப்பு இல்லை என்று கூறினார். காரணம் ஒருவர் வெளியே விடும் காற்று இந்தச் சாதனத்துக்கு உள்ளே போக முடியாமல் தடுக்கப்பட்டுவிடும் என்றார் அவர்.
இந்தப் புதிய கருவி 2020 ஜூன் முதல் 2021 ஏப்ரல் வரை மூன்று இடங்களில் மருந்தகப் பரிசோதனை களுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளது.
பிரித்தோனிக்ஸ் நிறுவனத்தை பேராசிரியர் டி வெங்கி வெங்கடேசனுடன் சேர்ந்து இந்தப் பல்கலைக்கழகத்தின் மூன்று பட்டதாரிகள் தொடங்கி இருக்கிறார்கள்.
இதற்கு இந்தப் பல்கலைக்கழகத்தின் பட்டதாரிகள் ஆய்வுப் புத்தாக்கச் செயல்திட்டம் ஆதரவு அளிக்கிறது.