கொவிட்-19 கொள்ளைநோய் வேகமாகப் பரவிவருவதைத் தடுக்க தங்குவிடுதிகள், கடைத்தொகுதிகள் போன்றவற்றில் அது குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாகக் கூறப்பட்டது.
இதன் தொடர்பில், நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு முன் பயன்படுத்தப்படும், ஏண்டிஜன் விரைவுப் பரிசோதனையின் முறையின்கீழ் 30 நிமிடங்களில் ஒருவருக்கு கிருமித்தொற்று இருக்கிறதா என்பதைக் கண்டறியும் வழி உள்ளது.
இது தற்பொழுது ஊழியர் தங்குவிடுதிகள், கட்டுமானத் தளங்கள், விமான நிலையங்கள், கப்பல் பட்டறைகள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது.
அத்துடன், 'பிசிஆர்' எனப்படும் பல்படியத் தொடர்வினை பரிசோதனை முறையிலும் இங்குள்ள ஊழியர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
ஏண்டிஜன் விரைவுப் பரிசோதனை முறையை இங்குள்ள தன்னாட்சி பல்கலைக்கழக மாணவர் தங்குவிடுதிகளில் அறிமுகம் செய்யவுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளளது.
மேலும், கேப்பிட்டாலாண்ட் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கடைத்தொகுதிகளில் உள்ள குத்தகைதாரர்களும் அங்கு செல்லும் வாடிக்கையாளர்களுக்கும் இந்தப் பரிசோதனை முறையை அறிமுகம் செய்ய உள்ளதாக சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் விவரித்துள்ளது.
இந்தச் சோதனை முறை அடிக்கடி பயன்படுத்தக்கூடிய நடைமுறை சாத்தியமான ஒன்று என்பதுடன் நல்ல பயன்தரக்கூடிய ஒரு சோதனை முறை என்றும் அமைச்சு தெளிவுபடுத்தியது.
"அனைத்து பணியிடங்களிலும் அனைத்து முதலாளிகளும் தங்கள் ஊழியர்களையும் வாடிக்கையாளர்களையும் பாதுகாப்பாக வைத்திருக்கும் நோக்கில் இதுபோன்ற மாறுபட்ட பரிசோதனைகளைக் கடைப்பிடிப்பதை ஊக்குவிக்கிறோம்," என்றும் அமைச்சின் அறிக்கை விளக்கியது.
ஏண்டிஜன் ரேப்பிட் பரிசோதனையில் கிருமித்தொற்று ஒருவருக்கு இருப்பது கண்டறியப்பட்டால், அவர் பின்னர் 'பிசிஆர்' எனப்படும் பல்படியத் தொடர்வினை பரிசோதனையையும் மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்று அமைச்சு விளக்கியது.
பிசிஆர் புரிசோதனையில் அந்த நபருக்குத் தொற்று இல்லை என்று தெரியும்வரை அவர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.