உங்களுக்கு கொவிட்-19 தொற்று இருக்கிறதா என்பதை நீங்களே பரிசோதித்துப் பார்த்துக்கொள்ள உதவும் கருவி மருந்து கடைகளில் விற்பனைக்கு வருகிறது.
கொவிட்-19 தொற்றை உடனுக்குடன் கண்டுபிடித்து தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை விரைவாக செய்து கிருமிப் பரவலைத் தடுக்க சிங்கப்பூர் முழுமூச்சாக பரிசோதனைகளை முடுக்கிவிட்டு வருகிறது.
இதில் மேலும் ஒரு வசதியாக இந்த ஏற்பாடு இடம்பெறும் என்று பிரதமர் லி சியன் லூங் நேற்று தெரிவித்தார். அந்த சுய பரிசோதனைக் கருவியைப் பயன்படுத்துவது எளிது. வசதியானதாகவும் அது இருக்கிறது என்று திரு லீ தெரிவித்தார்.
கொரோனா தொற்றைக் கண்டுபிடிக்க சிங்கப்பூரில் பிசிஆர், ஏஆர்டி பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. பிசிஆர் பரிசோதனைக்கு மாற்றாக இருக்கும் இந்தச் சோதனகள் தொற்று உள்ளவர்களை விரைவாகக் கண்டுபிடித்து அவர்களைத் தனிமைப்படுத்த உதவுகின்றன.
கொவிட்-19 தொற்றைக் குறைப்பதில் இது பெரும் உதவியாக இருக்கிறது என்று திரு லீ தெரிவித்தார். பிசிஆர் பரிசோதனைதான் துல்லியமானது, ஆனால் அதற்கு ஓரிரு நாட்கள் பிடிக்கும்.
ஏஆர்டி பரிசோதனை மூலம் 30 நிமிடங்களில் முடிவைத் தெரிந்து கொள்ளலாம். இருந்தாலும் இதை அந்த அளவுக்கு நம்ப முடியாது.
சுய பரிசோதனைக் கருவியை மக்கள் வாங்கலாம். அதைக் கொண்டு தங்களுக்குத் தொற்று இல்லை என்பதை அவர்கள் உறுதிப்படுத்திக் கொண்டு நிம்மதியாக இருக்கலாம் என்றார் அவர்.
முன்களப் பணியாளர்களும் தாங்கள் விரும்பினால் அன்றாடம் தாங்களே தங்களைப் பரிசோதித்துக் கொள்ளலாம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.