சிங்கப்பூரைச் சேர்ந்த இங் யு ஸி, 34, என்ற தொழிலதிபர், $1 பில்லியன் மோசடியில் சம்பந்தப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.
அவர் பிரபல வழக்கறிஞர்கள் சிலரை ஏமாற்றி இருக்கிறார் என்றும் குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது.
'என்வி அசட் மேனேஜ்மெண்ட்' மற்றும் 'என்வி குளோபல் டிரேடிங்' ஆகிய நிறுவனங்களின் இயக்குநரான அவர், நிக்கல் வர்த்தகத்தில் குறைந்தபட்சம் $1 பில்லியன் தொகையைப் போடவைத்து பல முதலீட்டாளர்களை ஏமாற்றி இருப்பதாகக் கூறப்படுகிறது.
பணத்தை முதலீடு ெசய்தால் மூன்று மாத காலத்திற்கு சராசரியாக 15% வருவாய் கிடைக்கும் என்று அவர்களிடம் கூறப்பட்டது.
அதை நம்பி முதலீட்டாளர்கள் போட்ட பணம் திரும்பவில்லை. நிக்கல் வியாபாரம் எதுவும் இடம்பெறவும் இல்லை. இங் கடந்த பிப்வரியில் கைதானார்.
அவர் மீது 18 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. நேற்று இங் அதேபோன்ற மேலும் 13 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கினார். $200 மில்லியனுக்கும் அதிக தொகை தொடர்பில் அவர் நம்பிக்கை மோசடி செய்து இருப்பதாகக் இக் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கின்றன.
புதிய குற்றச்சாட்டுகளில் தெமாசெக் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பொது வழக்கறிஞர் பெக் சியோக் லான், குற்றவியல் வழக்கறிஞர் சுனில் சுதீசன், சட்டக் கழகத்தின் முன்னாள் தலைவர் தியோ ஷென் யி ஆகியோரின் பெயர்கள் பாதிக்கப்பட்டவர்களாகக் குறிப்பிடப்பட்டு உள்ளன.
பிரபலமான முதலீட்டுத் துறை நிபுணர்கள் சிலரையும் இங் ஏமாற்றி இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
சென்ற மாத நிலவரப்படி, என்வி குளோபல் டிரேடிங் நிறுவனத்திடம் இருந்தும் இங்கிடமிருந்தும் ஏறக்குறைய $50 மில்லியன் கேட்டு முதலீட்டாளர்கள் குறைந்தது நான்கு வழக்குகளைத் தொடுத்து உள்ளனர் என்று தெரிகிறது.
இங்கிடம் இருந்து ஏறக்குறைய $100 மில்லியன் சொத்துகளை வர்த்தக விவகாரத் துறை கைப்பற்றி இருக்கிறது. இங்கின் இரண்டு நிறுவனங்களும் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் உரிமத்தைப் பெறவில்லை. இங் $1.5 மில்லியன் பிணையில் இருக்கிறார்.