ஈசூன் ரிங் ரோடு, புளோக் 141ல் இன்று (ஜூன் 29) காலை ஏற்பட்ட தீ விபத்தால் பாதிக்கப்பட்ட பத்து பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். காவல் அதிகாரி ஒருவரும் அதில் அடங்குவார் என்று கூறப்பட்டது.
கட்டடத்தின் மூன்றாம், நான்காம், ஐந்தாம் மாடி படுக்கை அறைகளில் தீ மூண்டிருப்பது குறித்துத் தங்களுக்குக் காலை 8.30 மணியளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் செல்வதற்குமுன், புளோக்கின் 10வது மாடி வரை வசிக்கும் சுமார் 100 குடியிருப்பாளர்கள் தங்களின் வீடுகளிலிருந்து வெளியேறிவிட்டனர்.
ஆரஞ்சு நிறத் தீப்பிழம்புகள் மூன்று மாடிகளின் வீடுகளைச் சுட்டெரிக்கும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வலம்வந்த வண்ணம் உள்ளன.
மேல் மாடிகளில் உள்ள வீடுகளுக்கு அடர்த்தியான சாம்பல் நிறப் புகை எழுவதையும் காணொளிகளில் பார்க்க முடிகிறது.
நீரைப் பீய்ச்சிடும் மூன்று ஜெட்களைக் கொண்டு நெருப்பு அணைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அத்துடன் தங்களுடைய பணிநேரமாக இல்லாதபோதும் அதே வட்டாரத்தில் இருந்த ஐந்து குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள், மருத்துவ, தீயணைப்புச் செயல்பாடுகளில் உதவிக்கரம் நீட்டினர்.
தீ மூண்டதற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் இன்று சம்பவ இடத்தைப் பார்வையிட்டபோது, நான்கு வீடுகள் முற்றிலும் கருகிய நிலையில் காணப்பட்டதாகக் குறிப்பிட்டார். மூதாட்டி ஒருவரது வீட்டில் தீ மூண்டதாகவும் அவர் கூறினார்.
“மூப்படையும் சமூகம் ஒரு புறம், தீச்சம்பவங்கள் ஒரு புறம் இருக்க, நாம் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்,” என்றார் அவர். உயிரிழப்புகள் இல்லையென்றாலும் இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கப்படும் என அவர் உறுதியளித்தார்.
சம்பவ இடத்திற்கு இன்று தமிழ் முரசு செய்தியாளர் சென்றிருந்தபோது, கருகிய வீட்டுச் சுவர்கள், சிதறிய பொருட்கள், கருகிய வாடை, வாட்டத்துடன் குடியிருப்பாளர் முகங்கள் என சற்று பதற்றம் நிறைந்த சூழல் நிலவியது. இருந்தபோதும் பாதிக்கப்பட்டோருக்கு வசிப்போர் குழுவினர் ஆறுதல் கூறுவதைக் காண முடிந்தது.
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டவர்களில் 80 வயது இந்திய மூதாட்டி ஒருவரும் அடங்குவார் என்று கூறப்பட்டது. அவரது உடல்நலம் தற்போது தேறி வருவதாக அவரின் அண்டைவீட்டார் தெரிவித்தனர். அவர் உறவினர்களுடன் வசித்து வருவதாகவும் சோங் பாங் சமூக மன்றம் கூறியது.
தீச்சம்பவம் ஏற்பட்ட நேரத்தில் அந்த மூதாட்டி தனியாக இருந்ததாக அண்டைவீட்டில் வசிக்கும் இல்லத்தரசி லதா, 49, கூறினார்.
“பக்கத்து வீட்டில் கரும்புகை சூழத் தொடங்கியபோது நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். என் மகன் சபரீஷ் உடனே அந்த மூதாட்டியைப் பார்க்கத் சென்றார். பதற்றத்தில் இருந்த மூதாட்டி, வீட்டிலிருந்து வெளியேறிவிட்டார். பின்னர், சில பொருட்களை மீட்கலாமே என்று எண்ணி மீண்டும் அந்த வீட்டுக்குள் போக நினைத்தார். சபரீஷ் அவரைத் தடுத்து பாதுகாப்பாக அங்கிருந்து அழைத்துச் சென்றார்,” என்று திருமதி லதா கூறினார்.
மூதாட்டி எங்கு செல்வதென்று தெரியாமல் பதறியதால், தான் நிதானத்துடன் செயல்படவேண்டியிருந்ததாக பல்கலைக்கழக மாணவரான சபரீஷ், 22, தெரிவித்தார்.
“அக்கம்பக்கத்தினர் உதவி செய்ததால் மூதாட்டியைச் சுமூகமாக மீட்க முடிந்தது,” என்றார் சபரீஷ்.
கூடுதல் செய்தி: கி. ஜனார்த்தனன்