கடந்த ஆண்டு மோசடி தொடர்பில் காவல்துறைக்கு 15,000க்கும் அதிகமான புகார்கள் வந்தன. இது, 2019ஆம் ஆண்டைக் காட்டிலும் 65% அதிகம்.
அந்த மோசடிகள் மூலம் கிட்டத்தட்ட $200 மில்லியன் இழப்பு ஏற்பட்டது.
சிங்கப்பூர் வங்கிகள் சங்கம் நேற்று மெய்நிகர் முறையில் நடத்திய நிதியியல் குற்றம் குறித்த கருத்தரங்கில் கலந்துகொண்டபோது உள்துறை துணை அமைச்சர் டெஸ்மண்ட் டான் இந்த விவரங்களைத் தெரிவித்தார்.
வங்கிகளின் வாடிக்கையாளர்கள் இத்தகைய மோசடிகளுக்கு இரையாகாமல் தடுக்க, அமைச்சுகள்நிலை மோசடித் தடுப்புக் குழு, சிங்கப்பூர் வங்கிகள் சங்கத்துடன் அணுக்கமாக இணைந்து பணிபுரிந்து வருவதாக திரு டான் குறிப்பிட்டார்.
அந்த அமைச்சுகள்நிலை மோசடித் தடுப்புக் குழுவின் தலைவராக திரு டான் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மோசடிகளைக் கண்டறிந்து, அவற்றை முறியடிக்க வங்கிகளின் முன்களப் பணியாளர்களுக்குப் பயிற்சி வழங்குவது தொடர்பில் வங்கிகள் சங்கமும் அமைச்சுகள்நிலை மோசடித் தடுப்புக் குழுவும் வங்கிகளுடன் அணுக்கமாக இணைந்து செயல்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டில் வங்கிகளின் முன்களப் பணியாளர்கள் மொத்தம் $3 மில்லியன் தொடர்பான 76 மோசடி முயற்சிகளை இடைமறித்தனர் என்று திரு டான் தெரிவித்தார்.
இதனிடையே, மோசடிகள் மற்றும் மோசடியான பரிவர்த்தனைகளில் இருந்து வாடிக்கையாளர்களைப் பாதுகாப்பது தொடர்பான நிதித்துறையின் நடைமுறைகளை மறுஆய்வு செய்யும் பொருட்டு வங்கிகள், முக்கிய கட்டணச் சேவை நிறுவனங்களின் பிரதிநிதிகள் அடங்கிய பணிக்குழுவை ஆணையம் அமைத்திருப்பதாக திரு டான் கூறினார்.
"மோசடியான கட்டணப் பரிவர்த்தனைகளுக்கான பொறுப்பைப் பங்கிடுவதில் நியாயமான, தெளிவான, நிலையான அணுகுமுறைகளை வழங்குவதே இந்த மறுஆய்வின் நோக்கம்," என்று அவர் குறிப்பிட்டார்.