கேடிவி கிருமித்தொற்றுக் குழுமத்துடன் தொடர்புடையவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில், கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த தமது அமைச்சு நான்கு பாதுகாப்பு வளையங்கள் கொண்ட அணுகுமுறையைக் கையாளுகிறது என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் நேற்று தெரிவித்தார்.
கேடிவி கிருமித்தொற்றுக் குழுமத்தில் நேற்று மாலை நிலவரப்படி 120 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் முதலாவதாகப் பாதிக்கப்பட்டவர் இம்மாதம் 11ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டார்.
பாதுகாப்பு வளையம் 1: கேடிவி கூடங்களுக்குச் சென்று வந்தவர்கள் டிரேஸ்டுகெதர் மற்றும் சேஃப்என்ட்ரி தரவு மூலம் அடையாளம் காணப்பட்டார்கள்.
அவ்வாறு கண்டறியப்பட்ட 2,480 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுவிட்ட னர். அவர்களில் சிலருக்குக் கிருமித்தொற்று இருப்பது உறுதியானது. தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் அவர்கள் பலமுறை கொவிட்-19 பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.
பாதுகாப்பு வளையம் 2: பாதிக்கப்பட்ட கேடிவி கூடங்களில் டிரேஸ்டுகெதர் மற்றும் சேஃப்என்ட்ரி தரவு விரிவான முறையில் பதிவு ஆகாததால் அங்கு பணியாற்றும் ஊழியர்களையும் வாடிக்கையாளர்களையும் அடையாளம் காண முடியவில்லை.
கேடிவி கூடங்களுக்குச் சென்று அங்குள்ள உபசரிப்புப் பெண்களுடன் நெருக்கமாக இருந்த வாடிக்கையாளர்கள் கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்ள இம்மாதம் 13ஆம் தேதி அழைப்பு விடுக்கப்பட்டது. இம்மாதம் 13ஆம் தேதி வரை, 160 பேர் கொவிட்-19 பரிசோதனை செய்துகொண்டனர். அவர்களில் 17 பேருக்குக் கிருமித்தொற்று உறுதியானது.
அடுத்த நாள் 501 பேர் கொவிட்-19 பரிசோதனை செய்துகொண்டனர். அவர்களில் எட்டு பேருக்குக் கிருமித்தொற்று உறுதியானது. இம்மாதம் 15ஆம் தேதி, 1,003 பேர் பரிசோதனை செய்துகொள்ள முன் வந்தனர். அவர்களில் யாருக்கும் கிருமித்தொற்று இல்லை.
பாதுகாப்பு வளையம் 3: கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களுடன் தொடர்பு வைத்திருந்த பொதுமக்கள் டிரேஸ்டுகெதர் மூலம் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்களுக்கு சுகாதார அமைச்சு சுகாதார அபாயம் குறித்த எச்சரிக்கையை குறுஞ்செய்தி மூலம் அனுப்பியுள்ளது அல்லது அனுப்பும்.
இந்த தனிநபர்கள் நியமிக்கப்பட்ட கொவிட்-19 பரிசோதனை நிலையத்தில் சட்டப்படி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதன் பின்னர் முதலாவது பிசிஆர் பரிசோதனை முடிவு கிடைக்கும் வரை அவர்கள் சுய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்.
அவர்களுக்குக் கிருமித்தொற்று இல்லை என்று தெரிந்தாலும், அவர்களுக்குள் கிருமியின் தாக்கம் இருக்கும் என்று சுகாதார அமைச்சு கூறுகிறது. ஆகவே, அவர்கள் தங்கள் வெளிநடவடிக்கைகளை 14 நாட்களுக்குக் குறைத்துக்கொள்ள வேண்டும். மிகவும் அத்தியாவசியமாக இருந்தால் மட்டுமே அவர்கள் வெளியே செல்லலாம் என்று ஆலோசனை கூறப்படுகிறது.
இந்த தனிநபர்களுக்கு அவர்கள் முதலாவது பிசிஆர் பரிசோதனை செய்துகொள்ளும்போது, என்டிஜன் சுய பரிசோதனைக் கருவிகள் வழங்கப்படும். அவர்கள் அதிலிருந்து ஏழாவது நாளில் சுயமாக பரிசோதித்து தங்களுக்குக் கிருமித்தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
மேலும் 14வது நாள் நெருங்கும்போது அவர்கள் நிர்ணயிக்கப்பட்ட பரிசோதனை நிலையத்தில் மற்றொரு பிசிஆர் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். இது அவர்களுக்குள் கிருமியின் தாக்கம் இல்லை என்பதை உறுதிப்படுத்தும்.
சுமார் 2,000 பேர் இந்தப் பிரிவில் உள்ளனர். இந்த தனிநபர்கள் கேடிவி கூடங்களுக்குச் செல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், கேடிவி கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்திருக்கலாம்.
பாதுகாப்பு வளையம் 4: கேடிவி கூடங்கள் அல்லது சிங்கப்பூர் போலிஸ் படை அடையாளம் காட்டியுள்ள இதுபோன்ற கூடங்கள் உள்ள இடங்களுக்குச் சென்றவர்களுக்கு சுகாதார அமைச்சு சுகாதார அபாயம் குறித்த விழிப்புநிலையை குறுஞ்செய்தி மூலம் அனுப்பியுள்ளது அல்லது அனுப்பும்.
சுகாதார அபாயம் குறித்த எச்சரிக்கை போலல்லாமல், இந்த தனிநபர்கள் சட்டப்படி எதுவும் செய்ய தேவையில்லை. இருப்பினும், அவர்கள் அடுத்த 14 நாட்களுக்கு மற்றவர்களுடன் உள்ள தொடர்பைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
அவர்கள் சில்லறை விற்பனை மருந்தகங்களில் விற்கப்படும் என்டிஜன் சுய பரிசோதனைக் கருவிகளை வாங்கி, அதன் மூலம் அடுத்த 14 நாட்களுக்குச் சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
இந்தப் பிரிவில் சில ஆயிரம் பேர் இருக்கக்கூடும் என்றும் சுகாதார அமைச்சர் ஓங் விவரித்தார்.