18 முன்னாள் இரவு கேளிக்கைக்கூடங்களுக்கு மட்டுமே உணவு, பான அரசாங்க ஆதரவு தொகுப்புத் திட்டம்

18 முன்னாள் இரவு கேளிக்கைக்கூடங்களுக்கு மட்டுமே உணவு, பான அரசாங்க ஆதரவு தொகுப்புத் திட்டம்

2 mins read
bc5c2399-9f31-4891-825e-b63af96d583a
-

உணவு, பானக் கடைகளாக மாற 18 முன்னாள் இரவு கேளிக்கைக்கூடங்களுக்கு மட்டுமே என்டர்பிரைஸ் சிங்கப்பூர் ஆதரவு தொகுப்புத் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அவற்றில் எதுவும் பெருகிவரும் கேடிவி கொவிட்-19 குழுமத்தின் ஒரு பகுதி அல்ல.

இந்த ஆதரவு மானியத்திற்கு மொத்தம் 400 இரவு நேர கேளிக்கைக்கூடங்கள் விண்ணப்பித்து இருந்தன. வெற்றிகரமாக விண்ணப்பித்துள்ள அந்த 18 கேளிக்கைக்கூடங்களில் 10 மதுபானக்கூடங்கள், ஆறு இரவு நேர மனமகிழ் மன்றங்கள், இரண்டு கரோவோக்கே நிலையங்கள் ஆகியவை அடங்கும்.

உணவு, பான நிலையங்களாக செயல்பட்டு வந்த சட்டவிரோத கேடிவி மன்றங்களில் அண்மையில் பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகள் மீறப்பட்டதன் காரணமாக கொவிட்-19 பரவியது.

இதன் தொடர்பில் வெளியாகியுள்ள கருத்துகளையும் தவறான கண்ணோட்டங்களையும் தெளிவுபடுத்தும் விதமாக என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பும் வர்த்தக, தொழில் அமைச்சும் இன்று (ஜூலை 21) கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டன.

கொவிட்-19 கொள்ளைநோய் சூழல் காரணமாக இரவு நேர கேளிக்கைக்கூடங்கள் கடந்த ஆண்டு மார்ச் 27ஆம் தேதியிலிருந்து செயல்படத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து உணவு, பான நிலையங்கள், அலுவலக இடங்கள், உடலுறுதி நிலையங்கள் உள்ளிட்ட அனுமதிக்கக்கூடிய நடவடிக்கைகளுக்கு தங்களது செயல்பாடுகளை மாற்றிக்கொள்ள பல வர்த்தகங்களும் சிங்கப்பூர் இரவு நேர கேளிக்கைக்கூட வர்த்தகச் சங்கமும் அரசாங்கத்திடம் மேல்முறையீடு செய்திருந்ததாக கூட்டறிக்கை தெரிவிக்கிறது.

இரவு நேர கேளிக்கைக்கூட தொழில்துறை எதிர்நோக்கிய சவால்களைக் கருத்தில் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையங்கள் கடந்த ஆண்டு அக்டோபரிலிருந்து தங்களது செயல்பாடுகளை மற்ற நடவடிக்கைகளுக்கு மாற்றிக்கொள்ள அரசாங்கம் அனுமதி வழங்கியதாக என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பும் வர்த்தக, தொழில் அமைச்சும் தெரிவித்தன.

அவ்வாறு செய்ய, அதிகாரிகளிடமிருந்து ஒப்புதல் பெற்று இரவு நேர கேளிக்கைக்கூடங்கள் வர்த்தகத் திட்டம் ஒன்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்நிலையில், ஆதரவுத் திட்டத்திற்கு வெற்றிகரமாக விண்ணப்பித்துள்ள நிலையங்கள், என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பிடமிருந்து $50,000 வரை மானியம் பெற தகுதி பெறுகின்றன.

இந்த நிலையங்கள் கொவிட்-19 விதிமுறைகளுக்கு உட்பட்டு நடப்பதை உறுதி செய்ய, போலிஸ் உடனான கூட்டு நடவடிக்கையுடன் என்டர்பிரைஸ் சிங்கப்பூர், நகர மறுசீரமைப்பு ஆணையம், சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் ஆகியவை இந்த நிலையங்களைச் சோதித்து வருகின்றன.