வரும் செவ்வாய்க்கிழமையிலிருந்து வழிபாட்டுத் தலங்களில் நடைபெறும் சமய நிகழ்வுகளில் அதிகபட்சம் 500 பேர் கலந்துகொள்ளலாம். ஆனால் அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களாக இருக்க வேண்டும். கொவிட்-19 கட்டுப்பாட்டுத் தளர்வுகளின் ஒரு பகுதியாக இந்த மாற்றம் நடப்புக்குக் கொண்டு வரப்படுகிறது.
தற்போது 50லிருந்து 100 பேர் கலந்துகொள்ளும் சமய நிகழ்வுகளுக்குச் செல்வோர் அதற்கு முன் கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கும் இன்னும் போடாதவர்களுக்கும் இந்த விதிமுறை பொருந்தும்.
தற்போதைய நடைமுறையின்படி வழிபாட்டுத் தலங்களில் ஒரே நேரத்தில் 100 பேர் வரை அனுமதிக்கப்படலாம்.
புதிய மாற்றத்தின்கீழ் வழிபாட்டுத் தலங்களில் ஒரே நேரத்தில் 500 பேர் கூடலாம். ஆனால் சமயப் பணியாளர்கள், ஆதரவு ஊழியர்கள் உட்பட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்று கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சு இன்று (ஆகஸ்ட் 7) கூறியது.
இரண்டாவது தடுப்பூசி போட்டு இரண்டு வாரங்களான பிறகே முழுமையாகத் தடுப்பூசி போட்டதாக ஏற்றுக்கொள்ளப்படும். அல்லது வழிபாட்டுத் தலத்தில் நடைபெறும் சமய நிகழ்வு முடிவதற்கு முன்பு கடந்த 24 மணி நேரத்துக்குள் கொவிட்-19 பரிசோதனை செய்து கிருமித்தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும்.