கொவிட்-19க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டோர் ஐந்து பேர் வரை உணவகங்களில் குழுவாக அமர்ந்து உணவருந்த ஆகஸ்ட் 10ஆம் தேதியிலிருந்து அனுமதி அளிக்கப்படும்.
நாட்டின் பொருளியலை மீண்டும் திறந்துவிடும் முயற்சிகளின் முதல் படியாக இந்த ஏற்பாடு அமைகிறது.
தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோர், நிகழ்வுக்கு முந்தைய கொவிட்-19 பரிசோதனையில் ‘தொற்று இல்லை’ எனக் கண்டறியப்பட்டால் அவர்களும் அந்த ஐவர் கொண்ட குழுவில் இடம்பெறலாம். கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தோருக்கும் இது பொருந்தும்.
சமூக ஒன்றுகூடல்களுக்கான அளவு தற்போதைய இரண்டிலிருந்து ஐந்தாக உயர்த்தப்படும். வீடுகளில் குடும்ப உறுப்பினர்களையும் நண்பர்களையும் ஐந்து பேர் வரை சென்று சந்திக்கலாம்.
தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களும் போட்டுக்கொள்ளாதவர்களும் உணவங்காடி நிலையங்களிலும் காப்பிக்கடைகளிலும் இருவர் கொண்ட குழுக்களாக மட்டும் உணவு, பானம் அருந்த முடியும் என்று வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் இன்று (ஆகஸ்ட் 6) மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.
தேசிய தினத்திற்குள் சிங்கப்பூர் மக்கள்தொகையில் ஏறக்குறைய 70 விழுக்காட்டினர் இரு தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டிருப்பர் என எதிர்பார்க்கப்படுவதால் கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது சாத்தியப்படுவதாக சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்தார்.
கொவிட்-19 நிலவரம் தொடர்ந்து சீராக இருந்தால், நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் கடைத்தொகுதிகள், சுற்றுலாத் தலங்களில் கொள்ளளவும் ஒன்பது நாள்கள் கழித்து, அதாவது ஆகஸ்ட் 19ஆம் தேதி மேலும் அதிகரிக்கப்படும்.