ஆப்கானிஸ்தானில் சுமார் 18 ஆண்டுகளாக வேலை செய்தவர் சிங்கப்பூரைச் சேர்ந்த மருத்துவர் வீ டெக் யங். 52 வயதான அவர் சென்ற ஆண்டு மார்ச் மாதம் சிங்கப்பூர் திரும்பினார்.
எனினும் ஆப்கானிஸ்தானில் உள்ள தனது நண்பர்களுடன் அவர் இன்னமும் தொடர்பில் இருக்கிறார்.
தலைநகர் காபூலை தலிபான் அமைப்பு கைப்பற்றியதைத் தொடர்ந்து அங்கு பலர் தங்கள் வீடுகளைவிட்டு வெளிவரவே பயப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
"பலர் பயந்து நடுங்குகின்றனர். தன்னை அல்லது தனது குடும்பத்தாரை யாரேனும் கொன்றுவிடுவார்களோ என்று அவர்கள் பயப்படுகின்றனர்," என்று அவர் சொன்னார்.
2004ஆம் ஆண்டில் அரசு சார்பற்ற அனைத்துலக சுகாதார அமைப்பு ஒன்றுக்குச் சுகாதார, தொண்டூழியச் சேவைகளை வழங்க டாக்டர் வீ ஆப்கானிஸ்தானின் பமியான் மாநிலத்திற்குச் சென்றார்.
சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் காபூலுக்குச் சென்றார். அங்கு அவர் உள்ளூர் வாசிகளில் ஒருவராகவே பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்டார்.
கொவிட்-19 கிருமி உலகெங்கும் பரவ ஆரம்பித்ததைத் தொடர்ந்து இன்னும் திருமணமாகாத அவர், தனது பெற்றோரின் அருகில் இருக்க சென்ற ஆண்டு சிங்கப்பூர் திரும்பினார்.
காபூலில் கிருமிப் பரவல் சூழல் மோசமாக இருந்ததும் அவர் நாடு திரும்பியதற்கு ஒரு காரணம்.
தான் ஆப்கானிஸ்தானில் இல்லாவிட்டாலும் அங்கிருக்கும் தனது நண்பர்களைப் பற்றி டாக்டர் வீ நினைக்காத நாளில்லை.
குடும்பத்தாருக்கு உணவு வாங்க வெளியே செல்லக்கூட நண்பர்கள் பயப்படுவதாகச் சொன்னார்.
தலிபான் காபூலை நெருங்கி வந்துகொண்டிருந்போது, தாங்கள் உயிருடன் இருப்போமா, எப்போது நகரில் வெடிகுண்டுத் தாக்குதல் நடக்கும் போன்ற சிந்தனைகள் நண்பர்களை வாட்டியதாக டாக்டர் வீ கூறி வருத்தப்பட்டார்.
ஆப்கானிஸ்தான் அடுத்த கட்டத்திற்கு நல்லபடியாகச் செல்ல அனைத்துலக அமைப்புகள் ஏதேனும் செய்யும் என்ற நம்பிக்கையைத் தான் கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.