மோசடிகளைத் தவிர்க்க உதவும் 'ஸ்கேம்ஷீல்ட்' செயலி சுமார் 8,600 தொலைபேசி எண்கள் முடக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சுக்கான துணையமைச்சர் டெஸ்மண்ட் டான் தெரிவித்துள்ளார். அதோடு, இச்செயலியின் வாயிலாக சுமார் 1.4 மில்லியன் குறுஞ்செய்திகளைப் பற்றிப் புகார் கொடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
உள்துறை அமைச்சின் நடத்தை அறிவியல் நிலையம் ஏற்பாடு செய்த இணையக் கலந்துரையாடலில் திரு டான் இதனைத் தெரிவித்தார்.
பல்வேறு அரசாங்க அமைப்புகளுடன், கல்வித் துறை, நிதி, இணைய வர்த்தகம் ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்களும் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
மோசடி செய்பவர்கள் பயன்படுத்தும் உயர்தர உத்திகள், மோசடிகளைத் தவிர்க்க அரசாங்க அமைப்புகளும் இதர துறையினரும் எடுத்துவரும் முயற்சிகள், மோசடியில் சிக்காமல் இருக்க பொதுமக்கள் என்ன செய்யலாம் போன்ற அம்சங்களைப் பற்றி கலந்துரையாடலில் பேசப்பட்டது.
மோசடிகளைத் தவிர்க்க எடுக்கப்படும் முயற்சிகளில் அதிகாரிகள் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாக திரு டான் தமது தொடக்க உரையில் குறிப்பிட்டார். அத்தகைய முயற்சிகளில் 'ஸ்கேம்ஷீல்ட்' செயலி ஒன்று என்று அவர் சொன்னார். இச்செயலியைத் தற்போது 'ஆப்பிள்' சாதனங்களில் மட்டும் பயன்படுத்தமுடியும்.
'ஆண்ட்ராய்ட்' சாதனங்களுக்கான செயலியும் தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது.
செயற்கை நுண்ணறிவைக் கொண்டு 'ஸ்கேம்ஷீல்ட்' செயலி, மோசடி குறுஞ்செய்திகளை அடையாளம் கண்டு அகற்றும்.
மோசடிக்காரர்களிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்புகளைத் தடுக்கும்.
நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற துணையமைச்சருமான திரு டான், 'ஸ்கேம்ஷீல்ட்' செயலி குறைந்தது 200,000 முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மோசடிச் செயல்கள் குறித்து விசாரணை நடத்தும் முக்கிய அமைப்பான 'ஏஎஸ்டி' எனப்படும் காவல்துறையின் மோசடி ஒழிப்புப் பிரிவு கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்டதையும் அவர் சுட்டினார்.
மோசடி ஒழிப்புப் பிரிவின்கீழ் இயங்கும் மோசடி ஒழிப்பு நிலையம், இந்த ஆண்டு முற்பாதியில் மட்டும் மோசடிச் செயல்களில் பறிபோகவிருந்த 66 மில்லியன் வெள்ளித் தொகையை மீட்டதாக அவர் சொன்னார்.
பல மோசடிச் செயல்களில் வெளிநாட்டவர் சம்பந்தப்பட்டிருக்கின்றனர்.
அதனால் இப்பிரவு வெளிநாடுகளில் சட்டத்தை நிலைநாட்டுவோருடனும் இணைந்து செயல்படுவதாக திரு டான் கூறினார்.
8,600 தொலைபேசி எண்கள் முடக்கம், 1.4 மில்லியன் குறுஞ்செய்திகள் பற்றி புகார்