உலகம் முழுவதும் நன்மை விளைவதற்கான முக்கிய சக்தியாக பிரதான சமயங்கள் இருந்து வருகின்றன. நற்பண்புகளை அவை கற்பித்துப் பல சமுதாயங்களைப் பயனுள்ளவையாகச் செதுக்கியுள்ளன. ஆனால், மனித வரலாற்றில் தவறு நேரக் காரணமாகவும் சமயம் இருந்துள்ளது என்றார் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்.
“வெறுப்புணர்வையும் பயங்கரவாதச் சிந்தனையையும் பரப்புவோர், சமயத்தைத் தவறாக பயன்படுத்துகின்றனர். அவர்களின் தீவிரவாத, தனிப்பட்ட சிந்தனைகள் இணையத்தில் பரவிவிடுகின்றன.
“கண்காணிக்காமல் விட்டுவிடும்போது பல முறை இவை சுய தீவிரவாதச் சிந்தனைக்கும் பயங்கரவாதச் சம்பவங்களுக்கும் வழிவகுத்துள்ளன,” என்றார் திரு ஹெங்.
லோரோங் கூ சாய் ஷங் ஹோங் கோயில் சங்கத்தில் இன்று நிகழ்ந்த சிங்கப்பூரின் அனைத்துச் சமய மன்றத்தின் (ஐஆர்ஓ) 72வது நினைவு தினத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார் திரு ஹெங்.
சமயம் இல்லாதவர்களின் விகிதம் கடந்த பத்தாண்டுகளில் 3% அதிகரித்துள்ளது என்றும் 15 வயதினரும் அதற்கு மேற்பட்ட சிங்கப்பூரர்களிலும் இப்பிரிவினர் 20 விழுக்காட்டாக உள்ளனர் என்றும் தெரிவித்தார் திரு ஹெங்.
இது ஒரு சிறிய குழு அல்ல என்று குறிப்பிட்ட அவர், சமயங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை வளர்ப்பது மட்டுமன்றி சமுதாயத்தின் வெவ்வேறு பிரிவுகளுக்கு இடையேயும் நல்லிணக்கம் இருப்பது இன்றியமையாதது என்றார்.
“கருணை, மரியாதை, புரிந்துணர்வு போன்ற பண்புநலன்கள் அனைத்து சமயங்களுக்கும் அடிப்படையாக உள்ளன. சமயத்தைப் பின்பற்றுபவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த அடிப்படைப் பண்புநலன்களை நாம் போற்றி வலுப்படுத்திக்கொள்ள வேண்டும்,” என்றார் அவர்.
தமக்கு 2016ஆம் ஆண்டில் பக்கவாதம் ஏற்பட்டபோது ஐஆர்ஓ சமயத் தலைவர்கள் ஒன்று திரண்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவர் குணமடைவதற்காக பிரார்த்தனை செய்த சம்பவத்தையும் நினைவுகூர்ந்தார் துணைப் பிரதமர் ஹெங்.
நிகழ்வில் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங், ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் டோங், ஐஆர்ஓ அமைப்பின் தலைவர் டான் தியாம் லாய் ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இவ்வாண்டு பொதுநல அறக்கொடை அமைப்புகளுக்கான அங்கீகாரத்தை ஐஆர்ஓ பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக பங்காளிகளுடன் இணைந்து பணியாற்றவும் பொதுமக்களுடன் அதன் தொடர்பை வலுப்படுத்திக்கொள்ளவும் ‘ஐஆர்ஓவின் நண்பர்கள்’ என்ற திட்டம் இன்று தொடங்கப்பட்டது.
‘ரோசஸ் ஆஃப் பீஸ்’, ‘ஒன்பீப்பள்.எஸ்ஜி’, ‘ஃபார் ஈஸ்ட் அமைப்பு’, ‘தை ஹுவா குவான் ஒழுக்க சமுதாயம்’ ஆகிய நான்கு அமைப்புகளும் இத்திட்டத்தின் முதல் நான்கு உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டன. அத்துடன் சிங்கப்பூர் பெண்களைக் கொண்டாடும் இந்த ஆண்டில் ‘நம்பிக்கை கொண்ட பெண்கள்’ என்ற சிறு புத்தகமும் வெளியிடப்பட்டது.
இவ்வாண்டுக்கான ஐஆர்ஓ விருதைப் பெற்ற சிஸ்டர் மரியா லாவ், துணைப் பிரதமர் ஹெங்குடன் இணைந்து இந்தப் புத்தகத்தை வெளியிட்டார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் 1949ஆம் ஆண்டில் ஐஆர்ஓ நிறுவப்பட்டது. ஆறு சமயங்களுடன் தொடங்கிய இந்த மன்றம், 10 சமயங்களை உள்ளடக்கியதாக இன்று விளங்குகிறது. பல தலைமுறைகளாக சிங்கப்பூரில் நிம்மதியையும் சமய நல்லிணக்கத்தையும் நிலைநாட்ட முக்கிய முயற்சிகளை இந்த மன்றம் எடுத்து வருகிறது.