சிங்கப்பூரில் சென்ற ஆண்டின் முதல் ஆறு மாத காலத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் பாதியில் ஒட்டுமொத்தமாக குற்றச்செயல்கள் 11.2% அதிகமாகி இருக்கின்றன.
ஜனவரி முதல் ஜூன் வரை மொத்தம் 19,444 குற்றச்செயல்கள் நிகழ்ந்ததாக போலிஸ் தனது அரையாண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மோசடிகள் எண்ணிக்கை 7,247 ஆக இருந்தது. அது 8,403 ஆகக் கூடியது.
மானபங்கச் சம்பவங்கள் 567லிருந்து 786 ஆக அதிகரித்தன. ஆபாச ஊடுருவல் சம்பவங்கள் 146லிருந்து 242 ஆயின.
கொள்ளை, கன்னக்களவு, வழிப்பறி ஆகியவை 40.5% குறைந்து 75 ஆயின. இது, கடந்த 10 ஆண்டுகளில் ஆகக்குறைவான இடை ஆண்டு அளவு என்று போலிஸ் தெரிவித்தது.
மோசடிகள், தில்லுமுல்லுகள் பற்றி தெரிவித்த போலிஸ், இந்த ஆண்டின் முதல் பாதியில் 10 வகையான மோசடிகளில் அப்பாவிகள் $168 மில்லியன் தொகையை இழந்துவிட்டதாகக் குறிப்பிட்டது.
இந்தத் தொகை அளவு, சென்ற ஆண்டின் முதல் பாதியில் $63.5 மில்லியனாக இருந்தது.
மோசடிப்பேர்வழிகள் தொடர்ந்து தங்கள் கைவரிசையை மாற்றிக்கொண்டே வருகிறார்கள் என்பதை போலிஸ் சுட்டியது.
கொவிட்-19 சூழ்நிலையைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு பலரையும் அவர்கள் ஏமாற்றி வருவதாகவும் அது குறிப்பிட்டது.
கடன் மோசடிகள்தான் அதிகம் என்றும் அவற்றில் பறிபோன தொகை $10.6 மில்லியன் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இணைய வர்த்தக மோசடிகள் அடுத்த நிலையில் உள்ளன. இவற்றில் $2.4 மில்லியனை பலரும் இழந்தனர். வேலை, முதலீட்டு மோசடிகளும் கணிசமாகக் கூடின.
வேலை தொடர்பான மோசடிகளில் $6.5 மில்லியன் பறிபோனது.
முதலீடு தொடர்பான தில்லுமுல்லுகளில் சிக்கி சென்ற ஆண்டின் முதல் பாதியில் பலரும் இழந்த தொகை $21.6 மில்லியன். அது இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் $66.2 மில்லியனானது.
இணையத்தில் மிரட்டல் விடுத்து பணம் பறிக்கும் குற்றச்செயல்கள் எண்ணிக்கை 81ல் இருந்து 141 ஆகியது. இவற்றில் பலரும் $410,000க்கும் அதிக தொகையை இழந்துவிட்டதாக போலிஸ் அறிக்கை தெரிவித்துள்ளது.
மோசடி தடுப்பு நிலையம் என்ற ஓர் அமைப்பை 2019ல் போலிஸ் அமைத்தது.
அதுமுதல் அப்பாவிகள் இழந்துள்ள தொகையில் ஏறத்தாழ 33.8% அளவை அதாவது $127 மில்லியன் தொகையை மோசடி தடுப்பு நிலையம் மீட்டுள்ளது.
இந்த நிலையம் வங்கிகளுடன் செயல்பட்டு 17,000க்கும் மேற்பட்ட கணக்குகளை முடக்கியது.
மோசடி தொடர்பானவை என்று நம்பப்படும் 21,000க்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் கணக்குகளை அது அம்பலப்படுத்தி உள்ளது.