நைஜீரியாவைச் சேர்ந்த மோசடிக்காரர்கள் சிங்கப்பூர் வங்கிக் கணக்குகளிலிருந்து மற்ற நாட்டு கணக்குகளுக்கு $2 மில்லியனுக்கும் மேலான தொகையை மாற்றிவிட உதவிய மாது ஒருவருக்கு நேற்று ஏழு ஆண்டு, நான்கு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அந்த மோசடிக்காரர்களிடம் தமது வங்கிக் கணக்குகளை வழங்கிய ரொஹைஸா ஆலப், 46, எனும் அந்த மாதுக்கு தரகுக் கட்டணம் வழங்கப்பட்டது. சட்டவிரோதமாக பெறப்பட்ட பணத்தை மாற்றிவிடுவதற்காக மற்றவர்களையும் அந்த மாது பணியமர்த்தினார்.
சட்டவிரோதமாக கையாளப்பட்ட பணத்தைப் பெறுவதற்காக மோசடிக்காரர்களிடம் வங்கிக் கணக்குகளை வழங்க மற்றவர்களுடன் கூட்டு சேர்ந்ததாக எட்டுக் குற்றச்சாட்டுகள் உட்பட மொத்தம் 15 குற்றச்சாட்டுகளை ரொஹைஸா ஒப்புக்கொண்டார்.
இதன் தொடர்பில் அரசாங்கத் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகமும் போலிசும் நேற்று வெளியிட்ட கூட்டறிக்கையில், சட்டவிரோதமாக பெறப்பட்ட பணத்தை மாற்றிவிடும் கும்பலில் ரொஹைஸா சம்பந்தப்பட்டிருந்ததாகக் கூறின.
அந்தப் பணத்தைப் பெற மோசடிக்காரர்களிடம் அவர் மொத்தம் 25 வங்கிக் கணக்குகளை வழங்கினார். இதன் மூலம் $1.35 மில்லியனுக்கு மேல் அவர் மாற்றிவிட்டார். ஒட்டுமொத்தமாக, மோசடிக்காரர்கள் சிங்கப்பூரைவிட்டு மற்ற நாட்டு வங்கிக் கணக்குகளுக்கு $2 மில்லியனுக்கு மேல் மாற்றவிட ரொஹைஸா உதவினார்.
மேலும், அதிகாரிகளின் விசாரணைக்கு இடையூறு விளைவிக்கும் நோக்கில், வர்த்தக விவகாரத் துறையிடம் பொய் கூறுமாறு இந்த விவகாரத்தில் கூட்டுச் சேர்ந்து செயல்பட்டவர்களில் ஒருவரிடம் ரொஹைஸா கூறினார். அதாவது, தமது வங்கிக் கணக்குகளில் பணம் கிடைத்தது குறித்து தமக்குத் தெரியாது என்று அதிகாரிகளிடம் கூறுமாறு அந்த நபரிடம் ரொஹைஸா சொன்னார்.
"சட்டவிரோதமாக பெறப்பட்ட பணத்தைக் குற்றவாளிகள் மாற்றிவிடுவதைத் தடுக்க நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து தொடர்ந்து பணியாற்றுவோம்," என்று கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.