வரும் நவம்பர் மாதத்தில் இருந்து, விருப்பமுள்ள தாதியர் பெரும்பாலான சுகாதாரப் பராமரிப்புச் சூழல்களில் தலையங்கி அணிந்துகொண்டு வேலை செய்யலாம். ஆனாலும், கணிக்க முடியாத வகையில் நோயாளிகள் நடந்துகொள்வது போன்ற, தாதியரின் பாதுகாப்பிற்கு ஆபத்தான சூழல்களில் அவர்கள் தலையங்கி அணிய அனுமதி மறுக்கப்படலாம்.
தலையங்கி அணிவது தொடர்பில் ‘அபாயத்தை விளைவிக்கும் அணுகுமுறை’ குறித்து வழிகாட்டி நெறிமுறைகள் இருப்பதாகவும் தாதியரின் பாதுகாப்பை உறுதிசெய்யும் பொருட்டு பல்வேறு நிபுணர்களுடன் கலந்தாலோசித்த பின்னர் அவை வகுக்கப்பட்டு வருவதாகவும் சுகாதார அமைச்சு இன்று தெரிவித்தது.
பெரும்பாலான சுகாதாரப் பராமரிப்புச் சூழல்களில், நோயாளிகள்மீது படாத வகையில் தாதியர் தங்களது பணிச்சீருடையுடன் சேர்த்து தலையங்கி அணியலாம் என்று சுகாதார அமைச்சு சொன்னதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி கூறுகிறது.
ஆயினும், அறுவை சிகிச்சைக் கூடங்கள் போன்ற நோய்த்தொற்றுக் கட்டுப்பாடுகள் கடுமையாக உள்ள இடங்களில், ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய தலையங்கியை அவர்கள் அணிந்துகொள்ளலாம் என்றும் அமைச்சு குறிப்பிட்டது.
“தலையங்கியை இழுப்பது போன்று கணிக்க முடியாத விதத்தில் நோயாளிகள் நடந்துகொண்டு, தாதியரின் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படக்கூடிய சூழல்களில் தலையங்கி அணிய அனுமதி மறுக்கப்படலாம்,” என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தமது தேசிய தினப் பேரணி உரையின்போது, பணியிடங்களில் முஸ்லிம் தாதியர் தலையங்கி அணிய அனுமதிக்கும் அரசாங்கத்தின் முடிவை பிரதமர் லீ சியன் லூங் அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, திருத்தப்பட்ட கொள்கை 7,000க்கு மேற்பட்ட ஊழியர்களுக்குப் பொருந்தும் என்றும் வழிகாட்டி நெறிமுறைகளின் அடிப்படையில்
உடுப்பு விதி மாற்றியமைக்கப்படும் என்றும் அமைச்சு தெரிவித்தது.தலையங்கி அணிவது தொடர்பில் மருத்துவ, நடைமுறை வழிகாட்டுதல்களும் அமல்படுத்தப்படும். தொற்றுநோயியல் நிபுணர்களுடன் ஆலோசித்து, மருத்துவ வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டன. நுண்ணிய மருத்துவச் செயல்முறைகள் பாதுகாப்பாக மேற்கொள்ளப்படுவதை இந்த வழிகாட்டுதல் உறுதிப்படுத்தும்.
எந்த வண்ணத்தில் தலையங்கி அணியலாம், சீருடைப் பணியாளர்கள் ஒரே மாதிரி காட்சியளிக்கும் வகையில் தலையங்கியை எவ்வாறு அணிய வேண்டும் போன்றவற்றை நடைமுறை வழிகாட்டுதல்கள் தெளிவுபடுத்தும்.
இங்குள்ள பொதுச் சுகாதாரப் பராமரிப்பு நிலையங்கள் இந்த வழிகாட்டுதல்கள் குறித்த விவரங்களைத் தங்களின் ஊழியர்களுக்கு வழங்கும் என்று அமைச்சு கூறியது. ஆனால், எப்போது அந்த விவரங்கள் வழங்கப்படும் என்பது தெரிவிக்கப்படவில்லை.