எம்ஆர்டி நிலையங்களில் முகக்கவசம் அணியாமல் செல்வோர், தனியாகக் கிடக்கும் பெட்டி, பைகளை அடையாளம் காண்பதற்கு நவீன தொழில்நுட்பத்திலான கண்காணிப்புக் கருவிகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
முதற்கட்டமாக ஐந்து எம்ஆர்டி நிலையங்களில் இந்த கண்காணிப்புப் புகைப்படக்கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஊட்ரம் பார்க், சைனாடவுன், டோபிகாட், லிட்டில் இந்தியா மற்றும் சிராங்கூன் ஆகியவை அந்த ஐந்து நிலையங்கள்.
இந்த வசதி அடுத்த ஆண்டுக்குள் டௌன்டவுன் நிலையச் சந்திப்புகளிலும் பொருத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிதாகப் பொருத்தப்படும் கேமராக்கள் ஏற்கெனவே எஸ்பிஎஸ் டிரான்சிட் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் இருந்து கிடைக்கப்பெறும் படங்களை ஆய்வுசெய்யும்.
இந்த நவீனக் கண்காணிப்புக் கருவிக் கட்டமைப்பு பிரான்ஸ் நாட்டின் 'தேல்ஸ்' என்னும் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. இந்தக் கருவியைத் தயாரிக்கும் பணியில் அந்நிறுவனம் கடந்த 18 மாதங்களாக ஈடுபட்டு வந்தது.
பொதுப்போக்குவரத்தில் பாதுகாப்பை மேம்படுத்துவதையும் பயணிகளுக்கு இனிய பயண அனுபவத்தைத் தருவதையும் எஸ்பிஎஸ் டிரான்சிஸ்ட் இலக்காகக் கொண்டுள்ளது என்று அந்நிறுவனத்தின் மூத்த துணைத்தலைவர் ஜெஃப்ரி சிம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
புதிய கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படுவதோடு ஏற்கெனவே பணியில் உள்ள நிலைய ஊழியர்களும் தங்கள் பணியில் தொடர்வர் என்றார் திரு ஜெஃப்ரி. இவர் வடக்கு-கிழக்குத் தடம், செங்கால்-பொங்கோல் எல்ஆர்டி ஆகிய தட மேம்பாட்டுப் பிரிவின் தலைவராகவும் பதவி வகிக்கிறார்.
ரயில் நிலையங்களில் பயணிகளைக் கண்காணிக்க இப்போது நிலைய ஊழியர்கள் சுற்றுக்காவல் பணியில் ஈடுபடுவதோடு சிசிடிவி கண்காணிப்புக் கருவி மூலம் நிலையத்தின் நிலைமையைக் கண்காணித்து வருகின்றனர்.
புதிய கண்காணிப்புக் கருவியால் முகக்கவசம் அணியாத பயணிகள், தனியாகக் கிடக்கும் பயணப்பைகள் போன்றவற்றை நிலைய ஊழியர்கள் எளிதில் அடையாளம் காணமுடியும் என்றும் அவர் கூறினார். எம்ஆர்டி நிலையங்களில் கூட்ட நெரிசலை அளவிடும் வசதியையும் இந்தப் புதிய கருவி பெற்றுள்ளது.
இதுகுறித்து கடந்த மார்ச் மாதம் ஊட்லீ நிலையத்தில் சோதனை செய்துபார்க்கப்பட்டது.
ஒவ்வொரு நாளும் வெவ்வேறு நேரங்களில் ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசல் குறித்த தரவுகளையும் இந்தக் கருவி பதிவு செய்யும்.
கூட்டம் அளவுக்கு மீறினால், அந்தக் கருவி நிலைய ஊழியர்களுக்கு கூட்டம் குறித்து எச்சரிக்கை விடுக்கும் என்று திரு ஜெஃப்ரி விளக்கினார்.
சில நேரங்களில் பயணிகளில் ஒருவர் மயக்கமடைதல் போன்ற சம்பவங்கள் நிகழும்போது அவ்விடத்தில் கூடும் கூட்டம் குறித்து உடனடியாக ஊழியர்களுக்கு இக்கருவி தகவல் அளிக்கும்.