இவ்வாண்டு தீமிதித் திருவிழா அடுத்த மாதம் 24ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும். அதன் தொடர்பிலான முதற்கட்ட நேர்த்திக்கடன்கள் அக்டோபர் 1ஆம் தேதியன்று தொடங்குகின்றன என்று இந்து அறக்கட்டளை வாரியம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தீமிதித் திருவிழா தொடர்பிலான சடங்குபூர்வ நிகழ்ச்சிகள் கடந்த மாதம் 15ஆம் தேதியன்று தொடங்கி தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன என்று கூறிய வாரியம், அனைத்து நிகழ்வுகளும் அரசாங்கம் வகுத்துள்ள பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகளுக்கேற்ப நடத்தப்படுகின்றன என்றும் விவரித்தது.
சமூகத்தில் அதிகரித்து வரும் கொவிட்-19 கிருமித்தொற்று சம்பவங்கள் காரணமாக, முன்பு அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சிகளில் தவிர்க்க முடியாத காரணங்களால் மாற்றங்கள் ஏற்படுமாயின், அது மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே செய்யப்பட்டதாக இருக்கும் என்பதை பக்தர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் வாரியம் வலியுறுத்தியது.
நேர்த்திக்கடன்களை நிறைவேற்ற குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்களே அனுமதிக்கப்படுவர். தீமிதித் திருவிழா தொடர்பில் வாரயிறுதி நாட்களில் இடம்பெறும் முதற்கட்ட நேர்த்திக்கடன்களிலும் தீமிதித்தல் நாளன்று இடம்பெறும் நேர்த்திக்கடன்களிலும் பங்கேற்கும் பக்தர்கள் கட்டாயமாக முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.
இணையம் மூலம் முன்பதிவு
தீமிதித் திருவிழா நேர்த்திக்கடன்களுக்கான இணைய முன்பதிவு இரு கட்டங்களாக இடம்பெறும். முதல்கட்டப் பதிவு வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 24) தொடங்கும்.
https://heb.org.sg/firewalking2021/ எனும் இணையத்தளத்தில் காலை 10 மணி முதல் முதற்கட்ட நேர்த்திக்கடன்களுக்கு முன்பதிவு செய்யலாம். தொலைபேசி மூலமாகவோ ஆலயத்திற்கு நேரில் சென்றோ இதற்கு முன்பதிவை செய்ய முடியாது.
இதில் பால்குடம், கும்பிடுதண்டம், அங்கப்பிரதட்சணம் போன்ற நேர்த்திக்கடன்களில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம். அக்டோபர் 23ஆம் தேதிவரை இந்த நேர்த்திக் கடன்களுக்கான முன்பதிவுகளைச் செய்யலாம்.
முன்பதிவு செய்வோர் முழுமையாக தடுப்பூசி போட்டிருக்கவேண்டும் அல்லது ‘ஏஆர்டி’ சோதனை செய்துவிட்டு வரவேண்டும். தீமிதி நாளில் நடக்கும் நேர்த்திக்கடன்களுக்கான இரண்டாம் கட்ட முன்பதிவு அக்டோபர் இரண்டாவது வாரம் தொடங்கும்.
இணையத்தில் வெற்றிகரமாக முன்பதிவு செய்து கட்டணம் செலுத்தியவர்கள் மின்னஞ்சலையும் குறுஞ்செய்தியையும் பெறுவர். முன்பதிவு செய்யாதவர்கள் கோயிலுக்குள் தங்களது நேர்த்திக்கடன்களைச் செலுத்த அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் பதிவு செய்துகொண்ட பக்தர்கள் மட்டும் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர் என்றும் அவர்களுக்கு துணையாக செல்ல மற்றவர்களுக்கு அனுமதி இல்லை என்றும் வாரியம் கூறியது.
அரசாங்க அதிகாரிகளிடமிருந்து பெறப்படும் ஆக அண்மைய கொவிட்-19 பாதுகாப்பு ஆலோசனையின்படி நேர்த்திக்கடன் செலுத்துவதற்கான கால அட்டவணை, அனுமதிக்கப்பட்டுள்ள பக்தர்களின் எண்ணிக்கை மாற்றப்படும் என்று வாரியம் தெரிவித்தது.
தமிழ் முரசிடம் பேசிய இந்து அறக்கட்டளை வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி த. ராஜசேகர், கிருமித்தொற்றின் காரணமாக சூழ்நிலையைப் புரிந்துகொண்டு விதிமுறைகளை மதித்து நடக்கும்படி பக்தர்களைக் கேட்டுக்கொண்டார்.
“குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும்தான் பக்தர்களை அனுமதிக்க முடியும். முன்பதிவின்றி எவரையும் அனுமதிக்க முடியாது. நேர்த்திக்கடன்களைச் செலுத்தும்போது முகக்கவசத்தை அவசியம் அணிந்துகொண்டு செய்யவேண்டும்,” என்று அவர் கூறினார்.
வேண்டுதலுக்காக உடலை நனைக்கும் வசதியும் இவ்வாண்டு இருக்காது என்றும் அவர் கூறினார்.
தீமிதி தொடர்பான முக்கிய சடங்குகள் இந்து அறக்கட்டளை வாரியத்தின் யூடியூப் ஒளிவழியின் மூலமாகவும் அதன் ஃபேஸ்புக் தளம் மூலமாகவும் ஒளிபரப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.