தீமிதித் திருவிழாவை இந்த ஆண்டு கோயிலுக்குச் சென்று காண முடியவில்லை என்ற ஏமாற்றம் இருந்தாலும் விழாவை நேரடியாக இணையத்தில் காண முடிந்ததில் பல பக்தர்களுக்கு மகிழ்ச்சி.
இந்து அறக்கட்டளை வாரியத்தின் இந்த ஏற்பாட்டைப் பக்தர்கள் வரவேற்றனர். யூடியூப், ஃபேஸ்புக் தளங்களில் ஒளிபரப்பான நேரலைக் காணொளி களைக் கிட்டத்தட்ட 55,000க்கும் மேற்பட்ட மக்கள் கண்டனர்.
தலைமைப் பண்டாரம் பூக்குழியை 4.46 மணிக்குக் கடந்தார். 60 பக்தர்கள் பாதுகாப்பு இடைவெளியைக் கடைப்பிடித்து தீமித்தனர். 5 மணி அளவில் அதை அவர்கள் நிறைவேற்றி முடித்தனர்.
தீமிதித் திருவிழாவில் கடந்த 20 ஆண்டுகளாக பங்கேற்று வரும் திருமதி பூ. கார்த்திகாயினி,32, பக்தர்கள் மனதளவில் அம்மனை தரிசிப்பதே முக்கியம் என்றும் தீமிதி தடைபடாமல் தொடர்ந்து நடந்துவருவது மகிழ்ச்சி தருகிறது என்றும் கூறினார்.
“இது போல மறுபடியும் பக்தர்களுக்கு ஒரு சூழ்நிலை ஏற்படக்கூடாது. அம்மனை அம்மா போல பார்க்கிறேன். ஓர் அன்னை அவரின் பிள்ளைகள் இல்லாமல் பிறந்தநாளைக் கொண்டாடுவது எப்படி இருக்குமோ அதுபோலவே இவ்வாண்டின் தீமிதியும் அமைகிறது. ஆனால் உடலளவில் நேரடியாகச் சென்றுதான் வழிபட முடியும் என்பது இல்லை.
“இறைவன் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்பதற்கு ஏற்ப, வீட்டிலேயே நம்மால் முடிந்த சிறு வழிபாடு செய்தும்கூட வழிபடலாம். மனதளவில் நமக்கு இருக்கும் பக்தியே முக்கியம்,” என்றார் கார்த்திகாயினி.
‘துர்க்கையம்மன் பிள்ளைகள்’ என்ற சமயத் தொண்டூழிய அமைப்பைச் சேர்ந்த கார்த்திகாயினி, அந்த அமைப்பின் ‘வாட்ஸ்அப்’ குழுவிலும் உள்ளார்.
கடந்த ஆண்டுகளின் தீமிதிப் படங்கள், காணொளிகள், இவ்வாண்டின் நேரலை இணைப்புகள் அதில் பகிரப்பட்டு வருகின்றன. திரு வேணு ஆர்ஷ் என்ற பக்தர் 12 ஆண்டுகளாக பூக்குழியைக் கடந்து வந்துள்ளார். கிருமிப்பரவல் சூழலில் அதிகக் கூட்டம் திரண்டால் பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்று அவர் கூறினார்.
“இந்த ஆண்டின் ஏற்பாடுகளை ஆதரிக்கிறேன். நேரலை மூலம் பார்த்து, வீட்டில் குடும்பத்துடன் சேர்ந்து சிறு வழிபாடு செய்து தீமிதித் திருவிழாவுடன் இணைந்திருக்கிறோம்,” என்றார் திரு வேணு, 41.
“முடிந்ததைச் செய்வது முக்கியம் என்று நினைக்கிறேன். காலச்சூழலுக்கு ஏற்ப வழிபாடுகளையும் மாற்றியமைக்கவேண்டும். வழக்கம்போல பூக்குழியில் இறங்க முடியாது என்ற ஏக்கம் இருந்தது. ஆனால் அதை எண்ணி வருந்தவில்லை. சூழ்நிலைக்குத் தகுந்த வழிபாடுகளைச் செய்வதே முக்கியம்,” என்றார் கடந்த 31 ஆண்டுகளாக தீமிதித் திருவிழாவில் பங்கேற்றுவரும் சீன பக்தரான திரு டேவிட் இங், 65.