அதிகரித்து வரும் விரைவுப் பரிசோதனை (ஏஆர்டி) கருவிகளின் தேவையைச் சமாளிக்கப் பல மாதங்களுக்குத் தேவையான கருவிகள் இருப்பில் உள்ளதாகவும் வாரா வாரம் புதிய கருவிகள் தருவிக்கப்படுவதாகவும் விநியோகிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வாடிக்கையாளர்கள் ஏஆர்டி கருவிகளை முண்டியடித்துக்வாங்கியதால் பல மருந்தகங்களில் ஏஆர்டி பரிசோதனை கருவிகள் தீர்ந்துபோனதையடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.
'எஸ்பிடி சைன்டிஃபிக்'கின் நிர்வாக இயக்குநரான திருவாட்டி ஜெஸ் லிம் தமது நிறுவனத்தின் கிடங்கு 20 மில்லியன் ஏஆர்டி கருவிகளைச் சேமிக்கும் வசதி கொண்டது என ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் கூறினார். மேலும், அக்கருவிகளுக்கான தேவைகள் மும்மடங்கு அதிகரித்துள்ளதாகவும் வாரந்தோறும் சில மில்லியன் ஏஆர்டி கருவிகள் பெறப்படுவதாக வும் அவர் கூறினார்.
'பிடி' நிறுவனத்தின் பிரதிநிதி, தங்களாலும் எந்த சிரமமும் இன்றி அதிகரித்து வரும் தேவைகளை எதிர்கொள்ள முடியும் என்று கூறினார். ஏஆர்டி கருவிகள் சில மாதங்களுக்குப் பிறகு காலாவதியாகிவிடும் என்றும் இதனால் சரியாகத் திட்டமிட்டு இறக்குமதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மேலும் அதிகரித்து வரும் நோய்த்தொற்று சம்பவங்களினால் சுயபரிசோதனை செய்துகொள்ள மக்களிடையே ஏஆர்டி கருவிகளின் தேவை அதிகரித்துள்ளது என்றார்.
'கார்டியன்'னின் பிரதிநிதி புதிய கருவிகள் இந்த வாரமும் அடுத்த வாரமும் தங்களை வந்தடையும் என்றும் தங்களது ஊழியர்கள் மக்கள் கருவிகளை வாங்க வாங்க தேவையான கருவிகள் வரவழைக்கப்படும் என்றும் கூறினார். முன்வைக்கப்படும் திட்டங்களுக்கு ஏற்ப, போதுமான கருவிகள் உள்ளதை உறுதிபடுத்த சம்பந்தப்பட்ட அமைச்சுகளுடன் இணைந்து பணியாற்றுவதாகத் திருவாட்டி லிம் கூறினார்.