கொவிட்-19 போன்ற கொள்ளைநோய்களால் ஏற்படும் இடர்ப்பாடுகளைக் கருத்தில்கொண்டு பொதுத்துறை கட்டுமானங்கள் தொடர்பான ஒப்பந்தப்புள்ளிகள் சமர்ப்பிப்பதில் வரும் நவம்பர் 1ஆம் தேதியிலிருந்து மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளன.
தொற்றுநோய் காரணமாக ஒப்பந்ததாரர்கள் கால நீட்டிப்புக்கு விண்ணப்பிக்க அனுமதி, ஒப்பந்தப்புள்ளியைச் சமர்ப்பிக்கும் நேரத்தில், காலம் அல்லது செலவு, அறியப்படாத தொற்றுநோய் தொடர்பான செலவுகளுக்கான குத்துமதிப்பான தொகையை உள்ளடக்குவது போன்றவை முக்கிய திருத்தங்களில் சில.
இந்த மாற்றங்கள் செப்டம்பர் 23ஆம் தேதியிட்ட கட்டட, கட்டுமான ஆணையத்தின் சுற்றறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
கட்டுமானத் தொழில்துறை செலவு அதிகரிப்பையும் ஊழியர் பற்றாக்குறையையும் எதிர்கொள்ளும் நேரத்தில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
தனியார், பொதுத் துறை பங்காளிகளை உள்ளடக்கிய ஒரு பணிக்குழு இந்தப் பரிந்துரைகளைச் செய்துள்ளது.
கொள்ளைநோய்ப் பரவலுக்கு இடையே, புதிய கட்டுமானம், ஆலோசனை தொடர்பான ஒப்பந்தப்புள்ளிகளில் கட்டுமானத் திட்டத்தை மேற்கொள்ளும் பங்காளிகளிடையே, இடர்ப்பாடுகளை சமமாகப் பகிர்வதற்காக உத்திகளைக் கருத்தில்கொண்டு இப்பரிந்துரைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
கட்டட, கட்டுமான ஆணையம், சிங்கப்பூர் சொத்துச் சந்தை மேம்பாட்டாளர்கள் சங்கம், சிங்கப்பூர் கட்டுமான ஒப்பந்ததாரர்கள் சங்கம் ஆகியோரால் இணைந்து செயல்படுத்தப்படும் இந்தக் குழு பிப்ரவரியில் கூடியது.
"கொவிட்-19 எதிர்பார்க்கப்படாத நிகழ்வு. தனியார், பொதுத் துறைகளில் பயன்படுத்தப்படும் பொதுவான கட்டுமான ஒப்பந்தப்புள்ளியில், கொள்ளைநோய்ப் பரவல் போன்ற இடர்ப்பாடுகளின்போது, கால நீட்டிப்புக் கோரிக்கை, இழப்பு, செலவுகள் போன்றவற்றுள் ஒப்பந்ததாரர்களின் கோரிக்கைகளை மதிப்பிடுவதற்கு போதுமான வழிமுறை இல்லை," என்று கட்டட, கட்டுமான ஆணையத்தின் சுற்றறிக்கை குறிப்பிட்டுள்ளது. சிங்கப்பூர் கட்டுமானத் துறையில், பொதுவாக பயன்படுத்தப்படும் கட்டுமான ஒப்பந்தப்புள்ளிகளில் பரிந்துரைக்கப்பட்ட இந்த மாற்றங்களைச் சேர்க்குமாறு பணிக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.
பாதுகாப்பு மேலாண்மை நடவடிக்கைகள் போன்ற கிருமித்தொற்று பரவுவதைத் தடுப்பதற்காக ஒப்பந்ததாரர்கள் செயல்படுத்த வேண்டிவரும் நடவடிக்கைகளால் ஏற்படும் தாமதங்கள், தற்போது கால நீட்டிப்பு கோரிக்கைக்கான அடிப்படைகளில் அடங்கும்.
கொள்ளைநோய்ப் பரவல் அல்லது அரசாங்கம் அறிமுகப்படுத்திய நடவடிக்கைகளினால் ஏற்படும் இழப்பு மற்றும் செலவுகளுக்கான இணைப் பகிர்வுக் கொள்கைகளும் திருத்தங்களில் சேர்க்கப்பட்டுள்ளன. இது வழங்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளியில் அதிகபட்சம் 5 விழுக்காடாக வரையறுக்கப்பட்டுள்ளது.
முன்னுரைக்கப்பட்ட அதிகபட்ச பகிர்வு அளவையும் தாண்டி கூடுதலாக செலவுகள் அதிகரித்திருந்தால் ஒப்பந்தக்காரர் இந்த அளவை பரிசீலனை செய்யலாம்.வரும் நவம்பர் முதல் தேதி அல்லது அதற்குப் பிறகு விடப்படும் ஒப்பந்தப்புள்ளிகளுக்கான நடைமுறைகளை அரசு முகவைகள் பின்பற்றும் என்றும் தயாராக உள்ள முகவைகள் இந்த நடைமுறைகளை உடனடியாக அமல்படுத்தும் என்றும் ஆணையம் கூறியது.