பகிரங்கமாக்கப்பட்ட ரகசிய நிதி ஆவணங்கள் 'பண்டோரா பேப்பர்ஸ்' விவகாரத்தில் சிங்கப்பூரில் இயங்கும் ஒரு நிறுவனம் குறிப்பிடப்பட்டுள்ளது. 'ஏஷியசிட்டி ட்ரஸ்ட்' எனும் அந்நிறுவனம், லத்தீன் அமெரிக்கா, அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா ஆகிய பகுதிகளில் இருக்கும் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு ரகசியம் காக்கும் நாடுகளில் போலி நிறுவனங்களை ஏற்படுத்தி அறக்கட்டளைகளை நிர்வகித்து வருவதாக 'பண்டோரா பேப்பர்ஸ்' ஆவணங்களில் தெரிவித்துள்ளது. இதன் தொடர்பிலான தகவல்களை ஆராய்ந்து வருவதாகவும் தேவைப்பட்டால் மேலும் சில கண்காணிப்பு நடவடிக்கைகளை எடுக்கப்போவதாகவும் சிங்கப்பூர் நாணய ஆணையம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் தெரிவித்தது.
'ஏஷியசிட்டி ட்ரஸ்ட்' நிறுவனத்தைத் தொடர்ந்து கூர்ந்து கவனித்து வருவதாகவும் ஆணையம் குறிப்பிட்டது. தவறான நடவடிக்கைகளுக்காக சிங்கப்பூரின் நிதிக் கட்டமைப்பு பயன்படுத்தப்படுவது சகித்துக்கொள்ளப்படாது என்றும் இதன் தொடர்பிலான விதிமுறைகளை மீறும் நிதி நிலையங்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தான் தயங்காது என்றும் ஆணையம் கூறியது.
கள்ளப் பணத்தை நல்லப் பணமாக்குவது, பயங்கரவாதச் செயல்களுக்கு நிதி வழங்குவது போன்றவற்றைத் தவிர்க்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காததால் சென்ற ஆண்டு 'ஏஷியாசிட்டி ட்ரஸ்ட்' நிறுவனத்திற்கு நாணய ஆணையம் 1.1 மில்லியன் வெள்ளி அபராதம் விதித்தது.