புருணையில் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் நீண்டகாலத் தடுப்பாற்றல் குறித்து அந்நாடும் சிங்கப்பூரும் கூட்டு ஆய்வில் ஈடுபடும்.
தெமாசெக் நிறுவனமும் புருணையின் சுகாதார அமைச்சும் மின்னியல் பொதுச் சுகாதாரத்துக்கான ஆசியான் அமைச்சர்நிலைக் கூட்டத்தில் நேற்று இதைத் தெரிவித்தன.
கொவிட்-19 நோயைக் கட்டுப் படுத்தும் உத்திகளைத் தீர்மானிக்க ஆய்வு முடிவுகள் உதவும் என்று அவை கூறின. பயணக் கொள்கைகள், சிறப்புப் பயண ஏற்பாடுகள் ஆகியவையும் ஆய்வு செய்யப்படும்.
மேலும் கிருமியைச் செயலிழக்க வைக்கும் 'ஆண்டிபாடிஸ்' எதிர்ப்புரதங்கள் குறைவாக உள்ளோருக்குக் கூடுதல் தடுப்பூசிகளைக் கட்டாயமாக்க வேண்டுமா என்பதையும் ஆய்வு தீர்மானிக்க உதவும்.