தலையங்கி என்பது முஸ்லிம் பெண்
களின் சமயக் கடமையாக இருந்த போதிலும் தேவை ஏற்படும்போது அவர்கள் தங்களது உடைகளில் மாற்றம் செய்துகொள்ளலாம் என முயிஸ் எனப்படும் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் அதன் அதிகாரத்துவ வழிகாட்டிக் குறிப்பில் தெரிவித்துள்ளது. இந்த வழிகாட்டிக் குறிப்பு நேற்று வெளியிடப்பட்டது. குறிப்பிட்ட சில வேலையிடங்
களின் தேவைகளுக்கு இணங்க முஸ்லிம் பெண்கள் இத்தகைய அணுகு
முறையைப் பின்பற்றலாம் என்றும் முயிஸ் கூறியுள்ளது.
மூத்த இஸ்லாமியப் பேராளர்களை உள்ளடக்கிய ஃபத்வா குழு இங்கு பின்பற்றப்படும் சமய நெறிமுறைகள் பற்றி தீர்மானிக்கிறது. அக்குழு வெளியிட்டுள்ள வழிகாட்டிக் குறிப்பு முஸ்லிம் தாதியர் அணியக்கூடிய தலையங்கியின் நீளம் அல்லது வடிவமைப்பு குறித்து எதனையும் தெரிவிக்கவில்லை.
இருப்பினும் மணிக்கட்டுக்குக் கீழ் எதனையும் அணியவேண்டாம் என்னும் மருத்துவமனைகளின் கொள்கைக்கு இணங்க தாதியர் நடந்துகொள்ளலாம் என்று முயிஸின் சமய வழிகாட்டிக் குறிப்பு தெரிவித்துள்ளது.
நோயாளிகளைப் பராமரிக்கும்போது மருத்துவர்களும் தாதியரும் குட்டைக் கை சட்டை அணிவதன் மூலம் முன்கை பகுதி வெற்றுப் பகுதியாக, அதாவது ஏதும் அணியாத பகுதியாக இருக்கும்.
நோய்த்தொற்றின் அபாயத்தைக் குறைக்கவும் சுகாதாரப் பராமரிப்புப் பணியாளர்கள் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்புக் கருதியும் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.
வரும் திங்கட்கிழமை (நவம்பர் 1) முதல் முஸ்லிம் தாதியர் தலையங்கி அணிய அனுமதி வழங்கப்படுவதையொட்டி வழிகாட்டிக் குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கான கொள்கை மாற்றத்தை பிரதமர் லீ சியன் லூங் ஆகஸ்ட் 29ஆம் தேதி தமது தேசிய தினப் பேரணி உரையில் அறிவித்தார். பல ஆண்டு காலம் இங்கு உள்ள சமூகங்களிடையே திரட்டப்பட்ட கருத்தொற்றுமை மற்றும் கலந்தாலோசனைகளுக்குப் பின்னர் இது தொடர்பான முடிவு எட்டப்பட்டது.
கொள்கை மாற்றம் சிங்கப்பூரின் 7,000க்கும் மேற்பட்ட சுகாதாரப் பராமரிப்புப் பணியாளர்களுக்குப் பொருந்தும்.