சவூதி அரேபிய கொடியைத் திருடியது உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக 33 வயது ஆடவர் ஒருவருக்கு நேற்று நீதிமன்றத்தில் 11 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
முகம்மது ஹலிமுன் முகம்மது ஷைஃபுல் எனப்படும் அவர் தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து தண்டனை அறிவிக்கப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி பின்னிரவு 12.30 மணியளவில் பினாங்கு ரோட்டில் உள்ள சவூதி அரேபியத் தூதரத்திலிருந்த கொடியை அதன் கம்பத்திலிருந்து ஹலிமுன் அகற்றியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் நிகழ்ந்த இரண்டு நாட்களுக்குப் பின்னர் அந்தத் தூதரகம் போலிசில் புகார் செய்தது. அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 5ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் கன்னாட் டிரைவில் அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார்.
அவர் திருடிய கொடி அவரது பையில் இருந்தது. கொடியைத் திருடுவதற்கு முன்னர் பீஸ் செண்டரில் உள்ள ஃபேர்பிரைஸ் எக்ஸ்பிரஸ் அங்காடியில் $2.50 மதிப்புள்ள மென்பானப் போத்தலை பணம் செலுத்தாமல் எடுத்துச் சென்றார் அவர். இரு மாதங்களுக்கு முன்னர் தமது 81 வயது பாட்டியை உதைத்து அவரது முகத்தில் அறைந்ததாகவும் ஹலிமுன் மீது குற்றம் சுமத்தப்பட்டது.