பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான ரயீஸா கான், பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தாம் பொய் சொன்னதை இன்று திங்கட்கிழமை (நவம்பர் 1) நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதையடுத்து, சிறப்பு உரிமைக் குழு முன்பு இவர் முன்னிலையாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் பகிர்ந்துகொண்ட சம்பவத்தை மீட்டுக்கொள்வதாகவும் பொய் கூறியதற்கு தம்மை மன்னிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
தாம் 18 வயதாக இருந்தபோது தாம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதால் அந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் சொன்னதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பேசியிருந்த ரயீஸா கான், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 25 வயது பெண் ஒருவருடன் புகார் அளிக்க போலிஸ் நிலையத்துக்குச் சென்றதாகவும் அப்பெண்ணை விசாரித்த போலிஸ் அதிகாரி ஒருவர், அப்பெண் அணிந்திருந்த உடை, மதுப்பழக்கம் குறித்து தகாத வார்த்தைகளில் பேசியதாகவும் கூறியிருந்தார்.
ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் போலிஸ் நிலையத்துக்கு தாம் செல்லவில்லை என்று இன்று நாடாளுமன்றத்தில் ரயீஸா கான் தெரிவித்தார்.
மாறாக, அந்தப் பெண், மகளிர் ஆதரவுக் குழுவிடம் கூறியதை அவரது அனுமதியில்லாமல் நாடாளுமன்றத்தில் தாம் தெரிவித்ததாக அவர் சொன்னார்.
பாலியல் பலாத்கார சம்பவம் குறித்து ரயீஸா பேசியபோது, அதுபற்றி விசாரணை நடத்த விவரம் அளிக்குமாறு சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் வலியுறுத்தினார்.
ஆனால், மேல்விவரம் தர ரயீஸா கான் மறுத்துவிட்டார்.