போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் சிங்கப்பூரர்கள் மூவரை மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு நேற்று முன்தினம் மாலை கைது செய்தது.
அதிகாரிகள் நடத்திய அதிரடிச் சோதனையில் மொத்தம் 423 கிராம் 'ஐஸ்' எனப்படும் ஒருவகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் தோராய மதிப்பு $63,000. போதைப்பொருளை உட்கொள்ளப் பயன்படுத்தப்படும் உபகரணங்களும் $19,100 ரொக்கமும் 115 போதை மாத்திரைகளும் இரண்டு இருமல் மருந்துப் புட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
நேற்று முன்தினம் புக்கிட் பாத்தோக் ஸ்திரீட் 52ல் 37 வயது ஆடவரை மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் ஒரு கிராம் 'ஐஸ்' வகை போதைப்பொருள் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
புக்கிட் பாத்தோக் அவென்யூ 4ல் உள்ள அவரது வீட்டில் இருந்த 110 போதை மாத்திரைகளும் இரண்டு இருமல் மருந்துப் புட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
அதே நாள் மாலை புக்கிட் பாத்தோக் ஸ்திரீட் 52 அருகில் 29 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார்.
அதே வட்டாரத்தில் உள்ள ஒரு வீட்டில் 30 வயது பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.
போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இந்த மூவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.