அண்மையில் ஓசிபிசி வங்கி வாடிக்கையாளர்களில் சிலர் குறுந்தகவல் மூலம் ஏமாற்றப்பட்டனர். தற்போது அதேபோன்ற மின்னஞ்சல் மூலமாக ஏமாற்றும் வேலையை ஏமாற்றுக்கார்கள் கையில் எடுத்துள்ளனர்.
சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையத்தின் பெயரில் (இராஸ்) அனுப்பப்படும் மோசடி மின்னஞ்சல் குறித்து ஆணையம் எச்சரித்துள்ளது. இராஸ் அமைப்பின் ஆணையர் இங் வாய் சூங் பெயரும் இடம்பெற்றுள்ளது. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான பில் கேட்சிடமிருந்து இருபது மில்லியன் டாலரை உங்களுடைய வங்கிக் கணக்கு மாற்ற முடியவில்லை. இதனால் பில் கேட்ஸ் அறநிறுவனத்திடமிருந்து உறுதி கடிதத்தைப் பெற வேண்டும் அல்லது பணத்தை மாற்றுவதற்கான அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்று அந்த மோசடி மின்னஞ்சல் தெரிவிக்கிறது.
இதனை புறக்கணிக்குமாறு சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் நேற்று அறிவுறுத்தியது.
"தயவுசெய்து அந்த மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க வேண்டாம். தனிப்பட்ட விவரங்களைத் தெரிவிக்க வேண்டாம். பணம் எதையும் செலுத்த வேண்டாம். அந்த மின்னஞ்சலைப் பின்பற்றி நடக்க வேண்டாம்," என்று ஆணையம் வலியுறுத்தியது.
அப்படி ஏதாவது நடந்திருந்தால் காவல்துறையில் புகார் அளிக்கும் படி அது கேட்டுக்கொண்டது.
கடந்த மாதம் ஓசிபிசி வங்கியைச் சேர்ந்த 470க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் குறுந்தகவல் மூலம் ஏமாற்றப்பட்டனர்.
இதில் சிக்கிய வாடிக்கையாளர்கள் குறைந்தது 8.5 மில்லியன் வெள்ளியை இழந்தனர்.
ஆனால் நல்லெண்ணத்தின் அடிப்படையில் வாடிக்கையாளர்கள் இழந்த பணத்தை வங்கி திருப்பியளிக்கும் என்று ஓசிபிசி வங்கி தெரிவித்தது.
இந்த மோசடி ஓய்வதற்கு முன்பே மின்னஞ்சல் மூலம் மேலும் ஒரு மோசடி தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பரிலும் மற்றொரு மோசடி மின்னஞ்சல் குறித்து ஆணையம் எச்சரித்திருந்தது. அதில் கணினி கிருமியுடன் ஓர் ஆவணம் இைணக்கப்பட்டிருந்தது. 'சிங்கப்பூர் அரசாங்க வருவாய் ஆணையம்' என்று குறிப்பிடப்பட்ட அந்த மின்னஞ்சலில் வரி செலுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு முன்பு மே மாதம் அனுப்பப்பட்ட மோசடி மின்னஞ்சலில் வரி ஏய்ப்புக்காக முழு அபரா தத்தை பெற்றுள்ளதாகவும் வங்கிக் கணக்கு ஒன்றைத் ெதாடங்க வேண்டும் அல்லது வங்கிக் கணக்கு விவரங்களுடன் பதி லளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த ஆகஸ்ட் மாதம் வரி செலுத்தாததற்கு அபராதம் கட்ட வேண்டும் என்று கூறி அனுப்பப்பட்ட வாட்ஸ்ஆப் தகவல் குறித்தும் ஆணையம் எச்சரித்திருந்தது.
இந்நிலையில் வரி செலுத்துவோரின் வரி விவரங்களும் வரி தொடர்பான எச்சரிக்கைகளும் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படு வதில்லை என்று ஆணையம் கூறியது.
தொலைபேசி வழியாக வங்கிக் கணக்கைத் திறக்க வேண்டும் என்றோ கடன் அட்டை அல்லது வங்கிக்கணக்கு விவரங்களை சரி பார்க்க வேண்டும் என்றோ கேட்கப் படுவதில்லை என்றும் ஆணையம் நினைவூட்டியது.