சிங்கப்பூர் ஆயுதப்படை போனா விஸ்டாவில் உள்ள ஸ்டார் விஸ்டா கடைத் தொகுதியில் பயங்கரவாத எதிர்ப்பு பாவனைப் பயிற்சி ஒன்றை நேற்று இரவு நடத்தியது.
சிங்கப்பூர் ஆயுதப் படையின் சிறப்புச் செயலாக்கப் பணிக்குழு கலந்துகொண்ட இப்பயிற்சியில், தரைக்கு அருகில் பறக்கும் விமானப் பயிற்சி உட்பட தரை மற்றும் ஆகாயப் பயிற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. பிணைக் கைதிகளை மீட்கும் நடவடிக்கைகளிலும் நகர்ப்புற சூழலில் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களைச் சமாளிக்கும் சூழலிலும் படையினர் பயிற்சி மேற்கொண்டனர்.
திங்கட்கிழமை இரவு ஒன்பது மணி முதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணி வரையிலும் நடத்தப்பட்ட இந்தப் பயிற்சியில் சிங்கப்பூர் ஆகாயப் படையின் H225M ரக ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன. இவை மருத்துவ அவசரநிலை, தேடுதல் மீட்பு நடவடிக்கை, மனிதாபிமான உதவிகள், இடர்கால துயர்துடைப்பு நடவடிக்கைகள், கடல் பாதுகாப்பு போன்ற பலதரபட்ட சூழல்களில் பயன்படுத்தப்படக்கூடியவை
ஆயுதப்படையின் தயார்நிலையைச் சோதிப்பதற்கு இந்தப் பயிற்சி நடத்தப்பட்டதாகக் கூறிய தற்காப்பு அமைச்சு பலதரப்பட்ட மிரட்டல்கள் கையாளப்படும் விதத்தை வலுப்படுத்தவும் பயிற்சி உதவுவதாகக் குறிப்பிட்டது.
சிங்கப்பூரின் அரசுரிமையையும் பாதுகாப்பையும் கட்டிக்காக்க படை தயார்நிலையில் இருப்பதைப் பயிற்சிகள் உறுதிசெய்ய கொவிட்-19 சூழலிலும் சிங்கப்பூர் ஆயுதப் படை அடிக்கடி பயிற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என்று சிங்கப்பூர் ஆயுதப் படையின் பேச்சாளர் கூறினார்.