மருத்துவர் பரிந்துரைத்த நுண்ணுயிர்க்கொல்லி (ஆன்டிபயாட்டிக்) மருந்தை உட்கொண்ட பிறகு ஒருவருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் அதற்கு அவரது குடலில் உள்ள நுண்ணுயிர்த்தொகுதி காரணமாக இருக்கக்கூடும்.
மனிதனின் செரிமான மண்டலத்தில் வாழும் பாக்டீரியங்கள், பூஞ்சைகள் போன்ற பல்வேறு நுண்ணுயிர்களின் தொகுதியே அது. அத்தொகுதியில் 'ஃபீக்கலிபாக்டீரியம் பிராட்ஸ்நிட்ஸியை' எனும் பாக்டீரியத்தின் அளவு குறைவாக இருந்தால், நுண்ணுயிர்க்கொல்லி மருந்து எடுத்துக்கொண்ட பிறகு ஒருவருக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுவதற்கான அபாயம் அதிகம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மனிதனின் செரிமான மண்டலத்தில் அதிகமாகக் காணப்படும் நுண்ணுயிரிகளில் எஃப். பிராட்ஸ்நிட்ஸியையும் ஒன்று.
சிங்கப்பூர் பொது மருத்துவமனை மற்றும் சிங்கப்பூர்-எம்ஐடி ஆய்வு, தொழில்நுட்பக் கூட்டணியைச் (Smart) சேர்ந்த ஆய்வாளர்கள் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
கடந்த 2019ஆம் ஆண்டில் நான்கு வார காலத்திற்கு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நல்ல உடல்நிலையுடன் காணப்பட்ட 30 பேர் மூன்று நாள்களுக்கு 'ஆக்மென்டின்' மாத்திரையை எடுத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
அந்த ஆய்வுக்காலத்தில் அவர்களின் மலம் சேகரிக்கப்பட்டு, ஆய்விற்கு உட்படுத்தப்பட்டது. எளிய பிசிஆர் பரிசோதனை முறையைக் கொண்டு, மலத்தில் இருந்த எஃப். பிராட்ஸ்நிட்ஸியை நுண்ணுயிரியின் அளவு கண்டறியப்பட்டது.
பரிசோதனையில் அந்த பாக்டீரியம் குறிப்பிட்ட அளவு குறைவாக இருந்தவர்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது கண்டறியப்பட்டது.
இதற்கு, நார்ச்சத்து அடங்கிய உணவு ஒரு தீர்வாக அமையலாம்.
"நார்ச்சத்துமிக்க உணவை உட்கொள்வது எண்ணற்ற பலன்களை வழங்கும். குடல்நலத்தைப் பேண இதுவே சிறந்த பரிந்துரையாக இருக்கும்," என்றார் ஆய்வாளர்களில் ஒருவரான பேராசிரியர் எரிக் ஜே. ஆல்ம்.