சிங்கப்பூரின் மூன்று ஆகப் பெரிய முட்டைப் பண்ணைகளில் ஒன்றான செங் சூன் முட்டைப் பண்ணையில் கோழிகளுக்கு நியூகாசல் எனப்படும் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்த நோய்த்தொற்றால் கோழிகள் முட்டையிடுவது தற்காலிமாகக் குறையக்கூடும்.
இதனால் செங் சூன் பண்ணையின் முட்டை விநியோகத்தில் சில வாரங்களுக்கு இடையூறு ஏற்படும் என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு கூறியது.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளின் கேள்விகளுக்கு அமைப்பு வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 25) அன்று பதில் அளித்தது.
ஆனால் இந்த நோய்த்தொற்றால் உணவுப் பாதுகாப்பில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் அது கூறியது.
கோழி உணவுவகைகள், முட்டைகள் ஆகியவற்றைக் கையாள்வதால் அல்லது சாப்பிடுவதால் இந்த நியூகாசல் கிருமி மனிதர்களுக்குத் தொற்றிய சம்பவங்கள் இல்லை என்று அமைப்பு கூறியது.
அதனால் செங் சூன் முட்டைகள் தொடர்ந்து விற்பனையாகலாம் என்று அது கூறியது.
கடந்த வாரம் அந்தப் பண்ணையில் முட்டை உற்பத்தி குறைந்ததை அடுத்து நோய் தெரிய வந்தது.
கோழிகள் நியூகாசல் தொற்றால் பாதிக்கப்பட்டதை ஆய்வுக்கூட பரிசோதனைகள் காட்டின.
நியூகாசல் கிருமி பறவைகளின் சுவாசக் குழாய், நரம்பு மண்டலம், செரிமானம் ஆகியவற்றைப் பாதிக்கக்கூடியது.