சிங்கப்பூருக்குள் குறுகிய கால அனுமதியில் நுழையும் வெளிநாட்டினர் எல்லாருக்கும் மார்ச் 11 வெள்ளிக்கிழமை முதல் மின்னியல் வருகை அனுமதி அட்டைகள் வழங்கப்படும்.
அதன் வழி கடவுச்சீட்டில் அதாவது பாஸ்போர்ட்டில் அனுமதி முத்திரை குத்தப்படாது.
இ-பாஸ் எனப்படும் மின்னியல் அனுமதிச் சீட்டு முறை கடந்த ஆண்டு அக்டோபரில் சாங்கி விமான நிலையத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
வெள்ளிக்கிழமையிலிருந்து அந்த மின்னியல் அனுமதி முறை படிப்படியாக எல்லா சோதனைச் சாவடிகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையம் விடுத்த அறிக்கையில் இதைத் தெரிவித்தது.
குடிநுழைவுச் சோதனை முடிந்த பின்னர், பயணிகளுக்கு மின்னஞ்சல் மூலம் மின்னியல் அனுமதிச் சீட்டு அனுப்பப்படும்.
மின்னஞ்சல் இல்லாதவர்கள், தங்கள் குடும்பத்தாரின் மின்னஞ்சல் முகவரியை வழங்கலாம்.
மின்னியல் அனுமதி அட்டையில், வருகை அனுமதியின் விவரங்கள் இடம்பெற்றிருக்கும். பயண காலம், சிங்கப்பூரில் அவர் இருக்க அனுமதிக்கப்பட்ட கடைசி நாள் போன்றவை அந்த விவரங்களில் சில.
இ-பாஸ் தகவல் தளத்தில், தாங்கள் பெற்றுள்ள குறுகிய கால அனுமதிகள் பற்றி வெளிநாட்டுப் பயணிகள் தெரிந்துபார்க்கலாம்.
முறையான சிங்கப்பூர் விசாவையும் தேவையான நுழைவு அனுமதியையும் பெற்ற பின்னர்தான் சிங்கப்பூருக்கு நுழைய வேண்டும் என்று குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையம் வெளிநாட்டுப் பயணிகளிடம் நினைவுபடுத்தியது.
சிங்கப்பூர் வந்திறங்குவதற்கு மூன்று நாள்களுக்கு முன்னர், பயணிகள் எஸ்ஜி வருகை அட்டையை இணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.