அரசாங்கத் துறையில் வீடமைப்புத் திட்டங்களுக்கும் இதர கட்டுமானத் திட்டங்களுக்கும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் முதன்முறையாக சுமார் ஒரு பில்லியன் வெள்ளி மதிப்புள்ள பசுமைப் பத்திரங்களை வழங்கியுள்ளது.
நீடித்த நிலைத்தன்மை அம்சங்களைக் கடைப்பிடிப்பதன் தொடர்பிலான இலக்குகளை அடையவும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தீர்வுகளுக்கான 'கிரீன் ஃபைனான்ஸ்' எனும் பசுமை நிதியைப் பயன்படுத்தவும் சிங்கப்பூர் எண்ணம் கொண்டுள்ளது. இதைக் கருத்தில்கொண்டு பசுமைப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
தேவைக்கேற்ப கட்டப்படும் 'பார்க் ரெசிடன்சஸ்@தெங்கா', யூ டீயில் அமையும் சிங்கப்பூரின் இரண்டாவது 'வெர்ட்டிக்கல் கம்போங்' எனும் ஒருங்கிணைந்த குடியிருப்புத் திட்டம் ஆகியவை இந்த ஏற்பாட்டினால் பலனடையும் திட்டங்களில் சில. வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட செய்தி அறிக்கையில் இந்த விவரங்கள் குறிப்பிடப்பட்டன.
இந்தப் பசுமைப் பத்திரங்களுடன் வருங்காலத்தில் மேலும் சில பத்திரங்கள் வழங்கப்படலாம். இவற்றின் மூலம் திரட்டப்படும் நிதியைக் கொண்டு 30 புதிய வீடமைப்புத் திட்டங்கள் அமைக்கப்படலாம் என்று கழகம் தெரிவித்தது.
பசுமைப் பத்திரங்கள், சுற்றுச்சூழலுக்கு உகந்த தீர்வுகளை வழங்கும் திட்டங்களுக்கு நிதி வழங்க வகைசெய்யும். அவற்றின் மூலம் முதலீட்டாளர்களுக்குக் கட்டணம் வழங்கப்படும்.
அந்தக் கட்டணம், குறிப்பிட்ட தொகையாகவோ சிறு கட்டணங்களாகவோ வழங்கப்படலாம்.
கட்டட, கட்டுமான ஆணையத்தின் 'கிரீன் மார்க் செர்டிஃபிக்கேஷன்' என்றழைக்கப்படும் பசுமைக் குறி முறையில் குறிப்பிட்ட அங்கீகாரத்தைப் பெறும் திட்டங்களுக்குப் பசுமைப் பத்திரங்களின் மூலம் திரட்டப்படும் நிதியைப் பயன்படுத்தலாம் என்று கழகம் கூறியது. ஆகச் சிறந்த சுற்றுச்சூழலுக்கு உகந்த தீர்வுகளைக் கொண்ட திட்டங்களுக்கு இந்த அங்கீகாரம் வழங்கப்படும்.