கொவிட்-19 கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் அரசாங்கத்தின் அண்மைய அறிவிப்பு உள்ளூர் சுற்றுலா நிறுவனங்களை உற்சாகமடைய வைத்துள்ளது.
நல்ல தருணத்தில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதாக சுற்றுலா நிறுவனங்கள் கருதுகின்றன.
உள்ளூர் சுற்றுலாவை மேம் படுத்துவதற்காக சிங்கப்பூரை மீண்டும் ரசிப்பதற்கான 'சிங்கப்பூர் ரீடிஸ்கவர்ஸ்' 100 வெள்ளி பற்றுச்சீட்டு ஒவ்வொரு சிங்கப்பூரருக்கும் வழங்கப்பட்டது.
இம்மாதத்துடன் இந்த பற்றுச்சீட்டு காலாவதியாவதால் அதனைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.
ஆனால் சுற்றுலா நிறுவனங்களின் முன்பதிவுகளை இது பாதிக்கும் என கூறப்படுகிறது.
இந்தத் தருணத்தில் சிங்கப்பூருக்கு வரும் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளதால் உள்ளூர் சுற்றுலா நிறுவனங்கள் நிம்மதி அடைந்துள்ளன.
இருந்தாலும் தளர்த்தப்படும் கட்டுப்பாடுகளால் உடனடி பலன் ஏற்படாது என்று சில சுற்றுலா நிறுவனங்கள் கூறுகின்றன.
கடந்த வியாழக்கிழமை அன்று முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்ட அனைத்துப் பயணிகளும் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என அரசாங்கம் அறிவித்தது.
இப்படி வரும் பயணிகளுக்கு தனிமை உத்தரவு கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு குறிப்பிட்ட சில நாடுகளைச் சேர்ந்த பயணிகள் மட்டுமே சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டனர்.
புதிய அறிவிப்பினால் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட தடுப்பூசி போட்டுக் கொண்டோருக்கான பயணப் பாதைத் திட்டம் முடிவுக்கு வருகிறது.
வரும் ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து சிங்கப்பூரில் நுழையும் பயணி களுக்கு கொவிட்-19 சோதனைகளும் நிறுத்தப்படுகின்றன.
'ஓரியண்டல் டிராவல் அண்ட் டூர்ஸ்' நிறுவனரான ஸ்டான்லி பூ, 'விடிஎல்' பயணத் திட்டம் நடை முறையில் இருந்தாலும் குறிப்பிட்ட சில விமானங்கள் மட்டுமே சேவை வழங்கியது என்றும் சிங்கப்பூரில் நுழைவதற்கான கட்டுப்பாடுகளால் பயணிகள் தயக்கம் காட்டியதாகவும் தெரிவித்தார்.
சிங்கப்பூரர்கள் இம்மாதம் இறுதி வரை உள்ளூர் சுற்றுலாத் தலங்கள், பயணங்கள் மற்றும் ஹோட்டல் அறைகளுக்கு 'சிங்கப்பூர் ரீடிஸ்கவர்ஸ்' பற்றுச்சீட்டை பயன்படுத்த முடியும்.
ஆனால் அதற்கு டிசம்பர் மாதமே முன்பதிவு செய்திருக்க வேண்டும்.
சென்ற வியாழக்கிழமை பேசிய போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன், தற்போதைய 18.2 விழுக்காட்டிலிருந்து பயணிகளின் எண்ணிக்கையை இவ்வாண்டு, குறைந்தது 50 விழுக்காட்டுக்கு அதிகரிப்பதே தளர்வுகளின் முக்கிய நோக்கம் என்று கூறியிருந்தார்.
இதனைச் சுட்டிக்காட்டிய திரு பூ, இது பெரிய ஊக்குவிப்பாக இருக்காது என்றார்.
இருந்தாலும் ஒன்றுமே இல்லாததற்கு இது சற்று ஆறுதல் அளிக்கும் என்றார் அவர்.
சிங்கப்பூர் ரீடிஸ்கவர்ஸ் பற்றுச் சீட்டு முடிவடையும் காலக்கட்டத்தில் தன்னால் தாக்குப் பிடிக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
'டிரைப் டூர்ஸ்' நிறுவனர்களில் ஒருவரான ஜேசன் லோ, புதிய அறிவிப்புகள் வெளியாகும்போது ஆரம்பத்தில் மந்தமாகத்தான் இருக்கும் என்றார்.
"சுற்றுலாப் பயணிகள் பழையபடி இங்கு வருவதற்கு, குறிப்பாக குழந்தைகளுடன் வரும் பயணிகள் அதிகரிப்பதற்கு இன்னும் சிறிது காலம் ஆகலாம்.
"இவ்வாண்டு இறுதியில்தான் உண்மையான நிலவரம் தெரிய வரும்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.