சிங்கப்பூர் பொறியலாளர் ஒருவர் ராஃபிள்ஸ் பிளேஸ் வட்டாரத்தில் உள்ள கட்டடத்தில் பராமரிப்பு வேலையைச் செய்துகொண்டிருந்தபோது, ஏழு மாடிகள் விழுந்து உயிர் இழந்தார்.
மொத்தம் 51 மாடிகள் உள்ள கெபிட்டாஸ்ப்ரிங் கட்டடத்தில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 8) அன்று காலை சம்பவம் நடந்தது.
மாண்டவர் டிராகேஜஸ் சிங்கப்பூர் எனும் நிறுவனத்தில் பணியாற்றிய 48 வயது பெண்மணி ஆவார்.
கெப்பிட்டாஸ்ப்ரிங் கட்டடத்தின் 16வது மாடிக்கு மேலே இருந்த பராமரிப்பு பணிகளுக்கான மாடியில் அவர் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த போலி உட்கூரை தகட்டில் கால் வைத்தார்.
அவரது எடை தாங்காமல் அது விழுந்ததில் அவரும் ஒன்பதாவது மாடி வரை - அதாவது 30 மீட்டர் தூரத்துக்கு கீழே விழுந்தார்.
மனிதவள அமைச்சின் பேச்சாளர் இதைத் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை காலை 10.55 மணியளவில் உதவி கோரி அழைப்பைப் பெற்றதாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
அவர் மாண்டு விட்டதாக குடிமைத் தற்காப்புப் படையின் மருத்துவ உதவியாளர் ஒருவர் சம்பவ இடத்தில் தெரிவித்தார்.
கெபிட்டாஸ்ப்ரிங் கட்டடத்தை கெபிட்டாலான்ட் நிறுவனம் கூட்டாகக் கட்டி இணை உரிமை பெற்றிருக்கிறது.
கெபிட்டாலான்ட் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஆஸ்காட் இன்டர்நேஷனல் மேனேஜ்மன்ட் நிறுவனம் கட்டடத்தை நடத்துகிறது.
கெபிட்டாஸ்ப்ரிங் கட்டடத்தில் அலுவலகங்களும் வாடகைக்கு விடப்படும் வீடுகளும் உள்ளன.
அந்த விபத்து குறித்து விசாரித்து வருவதாக மனிதவள அமைச்சு கூறியது.
பராமரிப்புப் பணிகளுக்கான மாடியில் யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்றும் ஆஸ்காட் நிறுவனத்திடம் அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
சிங்கப்பூரில் இவ்வாண்டு வேலையிட விபத்தில் ஏற்பட்டுள்ள 11வது மரணம் இது.