சிங்கப்பூரில் சென்றாண்டு 37 வேலையிட மரணங்கள் பதிவாகின. கிருமிப் பரவல் ஏற்படுவதற்கு முன் 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த எண்ணிக்கை 39 ஆக இருந்தது.
2020ஆம் ஆண்டு பல வேலையிடப் பணிகள் நிறுத்தப்பட்ட நிலையில் 30 வேலையிட மரணங்கள் ஏற்பட்டன.
சென்றாண்டு வேலையிடங்களில் உயிரிழந்தவர்களில் 13 பேர் கட்டுமானத் துறையையும், ஒன்பது பேர் தளவாடப் போக்குவரத்துத் துறையையும் சேர்ந்தவர்கள்.
இவர்களில் வாகனம் தொடர்பான விபத்துகளில் 11 பேர், உயரத்திலிருந்து விழுந்த எட்டு பேர், வெடிப்பு, தீ போன்றவற்றால் ஐந்து பேர் மாண்டனர்.
வேலையிட பாதுகாப்பு, சுகாதாரம் ஆகியவற்றின் தொடர்பில் மனிதவள அமைச்சு இன்று இந்தப் புள்ளிவிவரங்களை வெளியிட்டது.
2019, 2021ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட வேலையிட மரணங்களின் விகிதம் ஒவ்வொரு 100,000 வேலையாள்களுக்கு 1.1 என பதிவானது.
2028ஆம் ஆண்டுக்குள் இந்த விகிதத்ததை ஒன்றுக்குக் கீழ் குறைப்பது அமைச்சின் குறிக்கோள்.
அதற்காக வேலையிடங்கள் மீது அதிக கண்காணிப்பையும், வேலையிடத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேலையாள்களுக்கு மேம்பட்ட பயிற்சி ஆகியவற்றை மேற்கொள்ள அமைச்சு திட்டமிட்டுள்ளது.
இயந்திரங்கள் பாதுகாப்பான முறையில் கையாள தவறும் நிறுவனங்களுக்கு அகிகபட்ச அபராதம் விதிக்கப்படும். ஆபத்தான ரசாயனத்தைப் பயன்படுத்தும் நிறுவனங்கள், அதிக ஒலி எழுப்பும் வேலையிடங்கள் ஆகியவற்றில் கண்காணிப்பு அதிகரிக்கப்படும் எனறு அமைச்சு தெரிவித்தது.
வேலையிடத்தில் ஏற்படும் பெரும்பாலான மரணங்களும், காயங்களும் தடுக்கக்கூடியவை என்று மனிதவள மூத்த துணையமைச்சர் ஸாக்கி முகம்மது குறிப்பிட்டார். வேலையிடங்கள் பாதுகாப்பாக இருப்பதும், வேலையாள்களுக்கு ஆரோக்கியமான வேலையிடச் சுற்றுசூழலை அமைத்துதருவதும் அனைவருடைய கடமை என்று அவர் குறிப்பிட்டார். வேலையிடங்களில் ஊழியர்களின் பாதுகாப்பையும், ஆரோக்கியத்தையும் உறுதிசெய்ய நிறுவனங்கள் பொறுப்பு ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று திரு ஸாக்கி கூறினார்.