ஏறத்தாழ 15 பேருக்கு போலி கொவிட்-19 தடுப்பூசிகளைப் போட்டதால் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட மருத்துவர் ஒருவர், குறைந்தது மூவரிடம் ஒரு தடுப்பூசிக்கு $1,000 முதல் $1,500 வரை கட்டணம் விதித்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், குறைந்தது 430 பேர் தொலைவிலிருந்து கொவிட்-19 பரிசோதனை செய்ய டாக்டர் ஜிப்சன் குவா, 33, அனுமதித்தார்.
அப்போது இந்த நடைமுறை விதிகளுக்கு எதிராக இருந்தது.
இந்த விவகாரம் குறித்து தீர்ப்பளித்துள்ள சிங்கப்பூர் மருத்துவ மன்றம், இத்தகைய குற்றங்கள் மிகவும் கடுமையானவை என்று கூறியது.
அதிகபட்ச தண்டனையாக டாக்டர் குவா, 18 மாதங்களுக்குப் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அது கூறியது.
மன்றத்தின் அறிக்கை இன்று திங்கட்கிழமை (ஏப்ரல் 11) இணையத்தில் வெளியிடப்பட்டது.
அவரது செயல்பாடுகள் பொதுமக்களுக்கு இடர் ஏற்படுத்தியுள்ளதாகவும் மன்றம் தெரிவித்தது.
மருத்துவத் துறை மீதும் சிங்கப்பூரின் கொவிட்-19 பரிசோதனை ஆற்றல் மீதும் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைச் சீர்குலைத்திருக்கக்கூடும் என்றும் அது கூறியது.