முரசொலி
சிங்கப்பூரின் கொவிட்-19 பயணத்தில் குறிப்பிடத்தக்க ஒரு மைல்கல் என்று சொல்லும் அளவுக்குச் சூழ்நிலைகள் ஆக்ககரமாகத் திரும்பி இருக்கின்றன.
கொரோனா தொற்று சூழலைப் பொறுத்தவரை 2020ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முதலாக ஆரஞ்சு நிலையில் இருந்து மஞ்சள் நிலைக்குச் சிங்கப்பூர் திரும்பி இருக்கிறது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அமலான கட்டுப்பாடுகளில் கிட்டத்தட்ட எல்லாமே அகற்றப்பட்டுவிட்டன. இனிமேல் சமூகக் கலந்துரையாடல்களில் இவ்வளவு பேர்தான் ஈடுபடமுடியும் என்ற வரம்பு இருக்காது. அதேபோல் வேலை இடங்களுக்கு ஊழியர்கள் எல்லாரும் திரும்பலாம்.
வேலை இடத்தில் ஒருவரோடு ஒருவர் நேரடியாக அணுக்கத் தொடர்பு இல்லாதபட்சத்தில் ஊழியர்கள் முகக்கவசம் அணியவும் தேவையில்லை.
சேஃப் எண்ட்ரி, டிரேஸ்டுகெதர் இரண்டின் பயன்பாடும் பெரும்பாலான இடங்களில் இராது.
என்றாலும்கூட 500 பேருக்கும் அதிகமானோர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள், நடனம் அனுமதிக்கப்படும் இரவு நேரக் கேளிக்கை விடுதிகள், உணவகங்கள், உணவங்காடிகள் உள்ளிட்ட உணவு, பான நிலையங்களில் அவை நடப்பில் இருக்கும்.
வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு அளவு வரம்பும் இருக்காது. தனிப்பட்டவர்கள், குழுக்களுக்கு இடையில் பாதுகாப்பு இடைவெளி நிபந்தனையும் அகலும். பெரிய நிகழ்ச்சிகளில் இவ்வளவு பேர்தான் கலந்துகொள்ளலாம் என்ற வரம்பும் இராது. வெளிநாட்டு ஊழியர்களுக்கான சமூக வருகை அனுமதி வரம்பு அதிகரிக்கப்படும்.
மே 1 முதல் எல்லை கடந்த பேருந்துச் சேவை கள், டாக்சி சேவைகள் மீண்டும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு எதிராக நம்மை பாதுகாத்துக்கொள்ள நடப்புக்கு வந்த கட்டுப்பாடுகளில் அநேகமாக எல்லாம் அகன்றுவிட்டன.
உட்புற நிகழ்ச்சிகளில் முகக்கவசத்தை அணியவேண்டும் என்ற விதி மட்டும் தொடர்ந்து நடப்பில் இருந்து வரும் என்று சுகாதார அமைச்சு அறிவித்து இருக்கிறது.
கொரோனா தொற்று 2019 டிசம்பரில் தலைகாட்டி கடந்த இரண்டாண்டுகளில் உலகை படாதபாடு படுத்திவிட்டது. சிங்கப்பூரர்கள் இதுவரை சந்தித்திராத வகையில் வாழ்க்கை பாணியையே மாற்றிக்கொள்ள வேண்டிய அளவுக்குக் கட்டுப்பாடுகள் இடம்பெற்றன. மக்களும் அரசாங்கமும் ஒன்றாகச் சேர்ந்து செயல்பட்டன.
இதனால் ஒவ்வொருவரும் பாதுகாக்கப்பட்டு வாழ்வாதாரம் காக்கப்பட்டது. உலகில் கொவிட்-19 மரணம் ஆகக் குறைவான நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று என்ற சாதனை நிகழ்த்தப்பட்டது.
முகக்கவசம், தடுப்பூசி, பாதுகாப்பு இடைவெளி விதிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகள் காரணமாக கிருமித்தொற்று ஒடுங்கத் தொடங்கிவிட்டதை அடுத்து வழக்கமான நிலைக்கு வருவதற்கு வகைசெய்யும் அளவில் இதுவரை இல்லாத அள விற்கு இப்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இருக்கின்றன.
இது உடனடியாக ஒரே நேரத்தில் நடந்தது அல்ல. சிங்கப்பூர் படிப்படியாக கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வருகிறது. அவற்றில் ஒன்றாக சிங்கப்பூர்- மலேசிய எல்லை ஏப்ரல் 1ஆம் தேதி முற்றிலும் திறக்கப்பட்டது. கடந்த இரண்டாண்டு காலமாக பிரிந்தே கிடந்த மக்கள் மிக உற்சாகமாக, ஆவலாக எல்லை கடந்து சென்று வந்து மகிழ்ந்து வருவதைக் காண முடிகிறது.
சிங்கப்பூர்-மலேசிய எல்லை திறப்பு வழக்கமான ஒரு நிலை திரும்பிவிட்டது என்ற ஓர் எண்ணத்தை இரு பக்கமும் ஏற்படுத்தி இருக்கிறது.
இரவுநேர கேளிக்கை விடுதிகளுக்கான கட்டுப்பாடுகள் தளர்வதால் அந்தத் துறை உள்ளூர் மக்களை மட்டுமின்றி வெளியூர் பயணிகளையும் அதிகம் ஈர்க்கும். இதனால் பொருளியலுக்குப் புதிய வேகம் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கலாம்.
இந்தத் துறையைச் சேர்ந்தவர்களுக்கும் எதிர்காலத்தில் நம்பிக்கை ஏற்படக்கூடிய ஒரு சூழல் திரும்பி இருக்கிறது.
சிங்கப்பூரில் இன்னும் சில மாதங்கள் கழித்துதான் ஃபார்முலா ஒன் கிராண்ட் ப்ரிக்ஸ் கார் பந்தயம் நடக்கவிருக்கிறது என்றாலும் நுழைவுச்சீட்டுகள் பரபரப்பாக விற்கப்பட்டுவிட்டன.
இவை எல்லாம் வழக்கமான நிலைக்குத் திரும்ப சிங்கப்பூரர்கள் எந்த அளவுக்கு ஆர்வம் கொண்டு இருக்கிறார்கள் என்பதைப் புலப்படுத்துவதாக உள்ளன.
கொவிட்-19க்கு எதிரான போரில் இந்த அளவுக்கு வெற்றியைச் சாதிக்க ஒவ்வொருவரும் தங்கள் பங்கை ஆற்றி உதவி இருக்கிறார்கள்.
இருந்தாலும்கூட கொவிட்-19 கிருமி முற்றிலும் ஒடுங்கிவிடவில்லை என்பதைச் சிங்கப்பூரர்கள் மனதில் கொள்ள வேண்டும்.
புதிய உருமாறிய கிருமி தலைதூக்கும் வாய்ப்பும் ஆபத்தும் இன்னமும் இருக்கின்றன. அது எப்போது என்று கணிக்க முடியாத சூழ்நிலை இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு நிலை ஏற்படும்போது மறுபடியும் கட்டுப்பாடுகள் நடப்புக்கு வரலாம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
கிருமித்தொற்று பெரிய அளவில் ஏற்படும்போது அதை வெற்றிகரமான முறையில் சமாளிக்கத் தேவையான பல அம்சங்களை இந்தத் தொற்று மூலம் நாம் கற்றுக்கொண்டு இருக்கிறோம்.
கிருமித்தொற்றைத் தவிர்த்துக்கொள்ள, அது பரவுவதைத் தடுக்க என்னென்ன முன்னெச்சரிக்கை செயல்கள் தேவை என்பது இப்போது நமக்குத் தெரியும். அவற்றில் பெரும்பாலானவை மக்களுக்கு இப்போது பொதுவான நடைமுறையாகிவிட்டன.
ஆகையால் எதிர்காலத்தில் இத்தகைய பெரிய அளவிலான தொற்று ஏற்படும்போது அதைச் செவ்வனே சமாளித்துவிடலாம் என்ற ஆற்றல் நம்மிடம் முன்பைவிட இப்போது அதிகமாக இருக்கிறது.
வெளியில் செல்லும்போது முகக்கவசம் கட்டாய மானது அல்ல என்றாலும்கூட பெரும்பாலானவர்கள் முகக்கவசம் அணிந்து செல்வதைப் பார்க்க முடிகிறது. இப்படிப்பட்ட பொறுப்பு உணர்வுடன் மக்கள் நடந்துகொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது.
கொவிட்-19 கிருமி இனி உலகைவிட்டு அகலாது. அது சளிக்காய்ச்சல் போன்ற தொற்றுநோயாகத் தொடரும். அதோடுதான் நாம் வாழ்ந்தாக வேண்டும் என்ற ஒரு சூழலில், கிருமி தொற்றுவதை எப்படியெல்லாம் தவிர்த்துக்கொள்ளலாம் என்பதில் முன்பைவிட நாம் இப்போது தெளிவாக இருக்கிறோம்.
இந்த அனுகூலத்துடன், பலத்துடன், தொடர்ந்து தனிப்பட்ட, சமூகப் பொறுப்புடனும் நடந்துகொண்டு கொவிட்-19க்கு முந்திய காலத்தைப் போன்ற முற்றிலும் வழமையான வாழ்க்கைக்குத் திரும்ப நாம் அனைவரும் உறுதிபூணுவோம்.